66
தலைவி கூற்று

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான்,
5வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை
பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ,
10'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை?
கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ
15தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை?
தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
20களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை?
என ஆங்கு,
அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்,
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்;
25பூட்டு விடாஅ நிறுத்து

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தனது ஆற்றாமையே வாயிலாகத் தலைவி யுழைச் சென்றாற்கு, அவன் முன்பு வதுவை அயர்ந்ததூஉம், அப்பொழுது புனல் ஆடியதூஉம்,இப்பொழுது துணங்கை ஆடியதூஉம், கூறிப் புலந்தாள் தலைவி; அவள் புலந்தவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது (1)

   
67
தலைவி கூற்று

கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
5போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்
நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா!
புலப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கலப்பென் என்னும், இக் கையறு நெஞ்சே
10கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி,
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா!
ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
15நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா!
துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
20துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு?

இது வாயில் மறுத்த தலைமகள், ஆற்றாமை வாயிலாகப் புக்குக் கூடிய தலைமகனது நீக்கத்துக்கண், புக்க தோழிக்குக் கூறியது

   
68
காமக்கிழத்தி கூற்று

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
5புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!
'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி,
களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின்வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ
10'கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின்' என, மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?
'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
15வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்,
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?
20என ஆங்கு
நனவினான் வேறாகும் வேளா முயக்கம்
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு,
கனவினான் எய்திய செல்வத்து அனையதே
25ஐய எமக்கு நின் மார்பு

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தி தன் காதல் மிகுதி கூறி, ஊடியவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது

   
69
காமக்கிழத்தி கூற்று

போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,
5ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்
10துணிந்தது பிறிதாக, 'துணிவிலள் இவள்' என,
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ?
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிறவாக, 'நிறையிலள் இவள்' என,
15வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ?
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய்
தருக்கிய பிறவாக, 'தன் இலள் இவள்' என,
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ?
20என ஆங்கு
தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்

இதுவும் அது

   
70
தோழி கூற்று

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென,
கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி,
5துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி,
பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:
நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
10மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
15வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே
என ஆங்கு
20மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக்கால்!

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது

   
71
காமக்கிழத்தி கூற்று

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர,
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
5இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு,
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!
'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து,
10தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல்
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?
'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல்
15அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண்
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய?
'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி,
20அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய?
என்று, நின்
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ!
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு,
25ஆராத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு, ஊடிய காமக்கிழத்தி ஊடியவாறு கண்டு சென்று சார்ந்த தலைவனுடன், அவள் ஊடல் தீர்கின்றாள், கூறியது

   
72
காமக்கிழத்தி கூற்று

இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ,
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல,
5புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க,
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி,
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!
கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ,
10பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ
'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?
நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ
15கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,
ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை?
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல்
20குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை?
என ஆங்கு
செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று,
அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப;
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,
25அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ
இந் நோய் உழத்தல் எமக்கு?

இதுவும் அது

   
73
தலைவி கூற்று

அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்,
தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல,
5வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!
'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?
10கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி,
15முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள,
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
20தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின்,
தோலாமோ, நின் பொய் மருண்டு?

'தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, "எங்கையர்க்கு உரை" என இரத்தற்கண் தலைவி கூறியது

   
74
காமக்கிழத்தி கூற்று

பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம்,
5கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர!
'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
10முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து,
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
என ஆங்கு
'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என,
15ஊரவர் உடன் நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தியை, அவன் 'இவ்வகையான கூற, நீ ஏமுற்றாயோ?' என்றாற்கு அவன் கூறியது

   
75
தலைவி கூற்று

'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
5ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய்
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
10புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின்,
வதுவை நாளால் வைகலும், அஃது யான்
நோவேன், தோழி! நோவாய், நீ' என
எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென:
'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச்
15சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென,
விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்
'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என
ஊடியிருப்பேனாயின், நீடாது,
20அச்சு ஆறாக உணரிய வருபவன்
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்
'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான்
இகலியிருப்பேனாயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
25புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும்
ஆங்க
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
30அவ்அவ் இடத்தான் அவைஅவை காண
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே

'தலைவன் நாள்தோறும் வதுவை அயர்ந்து வந்தால், யான் அதற்குப் பொறேனாக, நீ ஊடல் இன்றி, அவன் வந்த பொழுதே எதிர்கொள்ளுதி' என்ற தோழிக்குத் தலைமகள் அதற்குக் காரணம் கூறியது

   
76
தலைவி கூற்று

'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என
5வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி:
'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ
'கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?
10ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,
நெடு்ங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?
'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றி,
15தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை
என ஆங்கு,
அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு,
20அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே,
தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ
நாம் செயற்பாலது, இனி?

'அச்சம் நீடினும்' என்றதனால் கூட்டம் உண்மை உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கு அஞ்சிய அச்சம் நீட்டித்துத் தலைவி கூறியது. இது 'திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே' என்னும் சூத்திர விதியான், மருதத்துக் குறிஞ்சி வந்தது.

   
77
தலைவி கூற்று

இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்
துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்;
திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல்,
5தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி,
மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:
தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன்
10உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின்
பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்?
பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல;
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
15என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?
மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?
20ஆங்க
'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,
இடையும், நிறையும் எளிதோ நிற் காணின்,
கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு?

பரத்தையர் சேரியில் சென்று வந்த தலைவனோடு ஊடிய தலைவி ஊடல் தீர்கின்றாள் கூறியது

   
78
காமக்கிழத்தி கூற்று

பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி,
உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி
பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,
5அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற்
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு,
நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப்
10பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!
'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து,
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான்
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?
15'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என்
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான்
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?
'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான்
20செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான்
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை?
ஆங்க
ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ,
25வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின்
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு?

பரத்தையர் சேரியில் சென்று வந்த தலைவனோடு ஊடிய காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாள் கூறியது

   
79
தலைவி கூற்று

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்
5வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும்
தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின்
10சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ?
புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்;
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ?
15கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;
'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ?
என ஆங்கு
20பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,
நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனைத் தந்து

செல்லாக் காலை, 'செல்க!' எனக் கூறி விடுத்தது. அது தலைவன் இனிச் செல்லான் என்பது இடமும் காலமும் பற்றி அறிந்த காலத்து, ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள், 'செல்க!' எனக் கூறி, விடுத்து ஆற்றுதலாம்

   
80
தலைவி கூற்று

நயம் தலை மாறுவார் மாறுக; மாறா,
கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப்
5பவழம் புனைந்த பருதி சுமப்ப,
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! எம் பாக மகன்!
10கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே,
'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணுங்கால்
ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
15தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே,
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணுங்கால்
ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே,
20நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர்
அல்குல் வரி யாம் காணுங்கால்
ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும்,
போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
25தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய
கோதை பரிபு ஆட; காண்கும்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி மகனுக்கு உரைத்தது

   
81
தலைவன் கூற்று


புதல்வனை நோக்கித் தலைவி கூறுதல்

மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்

மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர,

பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்,

நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,

5

உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில்

அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப,

பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்

கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா,

ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்

10

போல, வரும் என் உயிர்!

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,

பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற,

திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா,

15

பெருந்தகாய்! கூறு, சில


தோழியை நோக்கித் தலைவி கூறிய செய்தி

எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே

வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,

'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,

ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண

20

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன்

வாயுள்ளின் போகான்அரோ


தலைவன் கேட்ப, தோழியை நோக்கித் தலைவி உரைத்தல்

உள்ளி உழையே ஒருங்கு படை விடக்

கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை

எள்ளுமார் வந்தாரே, ஈங்கு


தலைவன்

25

ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர்

கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல,

சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்

ஆணை கடக்கிற்பார் யார்?


தலைவி

அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல்,

30

முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி

உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப

எதிர் வளி நின்றாய்; நீ செல்


தலைவன்

இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி

யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின்,

35

மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்,

தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்

ஆ போல் படர் தக, நாம்


தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்துழி, தலைவி தன் மகனைத் தழீஇ விளையாடுகின்ற விளையாட்டின்கண் தன் வரவு அறியாமைச் சென்று நின்ற தலைவன், அவள் ஊடல் உணர்வளவும் உறழ்ந்து சொல்லி, மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது

   
82
தலைவி கூற்று


தலைவி

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,

காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை

பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு

5

புக்க வழி எல்லாம் கூறு


தோழி

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்

காயாமை வேண்டுவல், யான்


தலைவி

காயேம்.

தோழி கூற்றும், தலைவி புதல்வனைக் கடிதலும்

10

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,

'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர்

15

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,

'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,

20

வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,

ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்

பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்;

அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்

தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்

25

புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு

கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா!

வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்

பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,

தொடியும் உகிரும் படையாக நுந்தை

30

கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,

வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி;

அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்

துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்

35

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;

அமைந்தது, இனி நின் தொழில்


புத்தேளிர் கோட்டம் வலம் செய்வித்துக்கொண்டு வருதற்குச் சேடியருடன் மகற்போக்கிய தலைமகள்,அவன் நீட்டித்து வந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உன்னிய வழி'யால், தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது (17)

   
83
தலைவி கூற்று


தலைவி தன் புதல்வனுடன் சென்ற தோழி நீட்டித்து வந்தமை பற்றி வினாவுதல்

பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை,

பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர,

இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்

விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய்,

5

உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம்

நீட்டித்த காரணம் என்?


தோழியின் மறுமொழி

கேட்டீ

பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்

குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும்

10

பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,

அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு

நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,

சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி

ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்

15

கால்கோள்' என்று ஊக்கி, கதுமென நோக்கி,

திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,

'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு

ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்

செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா

20

எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!

நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த

புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்' என்று இரங்குபு,

வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத

கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி,

25

ஒள்ளிழாய்! யான் தீது இலேன்


தலைவி தன் புதல்வனைக் கடிந்தும், அப்பொழுது அங்குவந்த தலைவனொடு புலந்தும் கூறுதல்

எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு

எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண்

அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,

முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை

30

வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு

தந்தையும் வந்து நிலை


விளையாட்டிக்கொண்டு வரற்குச் சேடியரோடு மகற் போக்கிய தலைவி, அவன் நீட்டித்துவந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளியவழி,'சிறைப்புறமாகக் கேட்டு வந்த தலைவனைக் கண்டு, அவள் தன்னுள்ளே புலந்தது

   
84
தலைவி கூற்று


தலைவி தோழியை வினாவுதல்

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்

நறு வடி ஆர் இற்றவை போல் அழிய,

கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்

சுரந்த என் மெல் முலைப் பால் பழுதாக நீ

5

நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!

கடவுட் கடி நகர்தோறும் இவனை

வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை

ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்

யார் இல் தவிர்ந்தனை? கூறு


தோழி கூறிய செய்தி உணர்ந்து, தலைவி நெஞ்சொடு கிளத்தல்

10

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட

குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,

'இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா

மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல்நகர்

வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்

15

தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்

தம்தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,

ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் 'பிறன் பெண்டிர்

ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை,

செறு தக்கான் மன்ற பெரிது'


தலைவி புதல்வனொடு புலந்து உரைத்தல்

20

சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட,

மோதிரம் யாவோ? யாம் காண்கு

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்

25

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்' என்பது தன்னை

அறீஇய செய்த வினை

அன்னையோ? இஃது ஒன்று

முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்,

30

வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று

தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண்

தந்தார் யார், எல்லாஅ! இது?

'இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு' என்னும்

தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை,

35

'இது தொடுக' என்றவர் யார்


தலைவி தன் நெஞ்சு அழிந்து கூறுதல்

அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த

பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்;

வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?

மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள்

40

தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன்

யானே தவறுடையேன்!


கடவுட் கடி நகர்தோறும் வலங் கொளீஇ வரற்குச் சேடியரோடு மகற் போக்கிய தலைவி அவன் நீட்டித்து வந்துழி, ' தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளியவழி'யின்கண், தந்தை தொடி மகன் கைக் கண்டு புலந்தாள் தன்னுள்ளே அழிந்து கூறியது (19)

   
85
தலைவி கூற்று

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு

பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி

உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொல்ங் காழ்; மேல்

மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்

5

தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை

கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,

10

பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்

சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு

ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,

15

அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண,

சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை

ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்

செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப்

பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி

20

நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ,

செம்மால்! நின் பால் உண்ணிய

பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத்

தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார்

நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்

25

நுந்தைபால் உண்டி, சில

நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக,

பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா

ஞாயர்பால் உண்டி, சில

அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத்

30

தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை

வருக என்றார், யார்கொலோ, ஈங்கு?

என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என்

பாராட்டைப்பாலோ சில

செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்

35

வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை

தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்


தலைவி தன் மகனைப் பாராட்டி, பால் கூறிட்டு ஊட்டுகின்றவழி, சிறைப்புறமாகக் கேட்டுப் புக்க தலைவனைக் கண்டு, தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது.

   
86
தலைவி கூற்று

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,

கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,

பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட

நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய்

5

கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல்

பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப,

கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,

தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த

தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்

10

போர் யானை, வந்தீக, ஈங்கு!

செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை

நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;

கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்

வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

15

'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல்,

மென் தோள் நெகிழ விடல்

பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக்

கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல்,

20

சால்பு ஆய்ந்தார் சாய விடல்

வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு

ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல்,

நோய் கூர நோக்காய் விடல்


பின்னே மறைய நின்ற தலைவனைத் தலைவி கண்டமை

25

ஆங்க

திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்

மகன் அல்லான் பெற்ற மகன்?

மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்


தலைவன் உரையும், அப்பொழுது தலைவன் மார்பில் பாய்ந்த புதல்வன் செயல் கண்டு, தலைவி உரைத்தலும்

'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ? காவாது ஈங்கு

30

ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம்

கன்றி அதனைக் கடியவும், கை நீவி,

குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு,

தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா

அன்பிலி பெற்ற மகன்


'தந்தையார் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தம் இல் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்' என்பதனால், மகனைத் தலைவனை ஒக்கலாம் குணனும் ஒக்கலாகாக் குணனும் தலைவி கூறுகின்றுழி,மறைந்து புக்க தலைவன் அவள் ஊடல் உணர்வன சொல்ல, மகன் வாயிலாக ஊடல் தீர்வாள் தன்னுள்ளே கூறியது (21)

   
87
தலைவி கூற்று


தலைவி

ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை

வெரூஉதும், காணுங்கடை


தலைவன்

தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்,

மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு?


தலைவி

5

ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்;

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;

நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்

புலப்பார் உடையர், தவறு


தலைவன்

அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி;

10

காயும் தவறு இலேன் யான்


தோழி

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது

நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின்

ஊடுதல் என்னோ, இனி?


தலைவி நெஞ்சொடு கூறல்

'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்

15

தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப்

பாடு இல் கண் பாயல் கொள


பரத்தையர் சேரி் சென்றமை அறிந்திலள் எனத் தலைவிமாட்டுச் சென்றவனோடு அவள் ஊடி உறழ்ந்து கூறி, தோழி வாயிலாக ஊடல் தீர்வாள், தன் நெஞ்சொடு கூறியது

   
88
தலைவி கூற்று


தலைவி

ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற

முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக,

தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு

அடியரோ ஆற்றாதவர்?


தலைவன்

5

கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று?


தலைவி

வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது. கூறு நின்

மாயம், மருள்வாரகத்து


தலைவன்

ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா

என்கண் எவனோ, தவறு?


தலைவி

10

இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல்,

வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,

ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்

சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,

தவறாதல் சாலாவோ? கூறு


தலைவன்

15

'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை

தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு


தலைவி

இனித் தேற்றேம் யாம்

தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்

தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி,

20

நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி

யார் மேல்? விளியுமோ? கூறு


அவ் ஆற்றால் புக்க தலைவனுடன் ஊடியும் உறழ்ந்தும் சொல்லி, பொய்ச் சூள் அஞ்சி, ஊடல் தீர்ந்தது

   
89
தலைவி ஊடல் தீர்தல்


தலைவி

யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்

ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை

வாரல்; நீ வந்தாங்கே மாறு


தலைவன்

என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று

5

போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்

ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?


தலைவி

ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!

பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,

வருந்தல் நின் வஞ்சம் உரைத்து


தலைவன்

10

மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த,

இன்னகை! தீதோ இலேன்


தலைவி

மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர்

புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்

15

என்று அடி சேர்தலும் உண்டு!


தலைவன் 'காமத்தின் வலியும்' என்றதனால் ஆற்றாமை வாயிலாக வலிந்து புக்கு நெருங்கிக் கூடுமிடத்து, அவனுடன் தலைவி ஊடிச் சில சொல்லி, அவன் ஆற்றாமை கூறுவது கேட்டு ஊடல் தீர்ந்தது

   
90
காமக்கிழத்தி கூற்று


தலைவி

கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,

மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்

பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு?


தலைவன்

ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?


தலைவி

5

கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி,

பாடு பெயல் நின்ற பானாள் இரவில்

தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,

வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா

ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,

10

ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்

சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்

போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?

ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்

தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?

15

மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்

நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?

'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்

சீறடி தோயா இறுத்தது அமையுமோ?

கூறு இனி; காயேமோ, யாம்?


தலைவன்

20

தேறின், பிறவும் தவறு இலேன் யான்;

அல்கல் கனவுகொல் நீ கண்டது?


தலைவி

'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்

கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று

பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!

25

நின்றாய்; நின் புக்கில் பல'


தலைவன்

மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு


தலைவி

ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ

30

நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?


'புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்' என்பதனால், தலைவன் புலப்படப் பரத்தையரிடத்து ஒழுகாது மறைந்து ஒழுகி வந்து நின்றவனுடன் காமக் கிழத்தி ஊடிச் சொல்லி, தலைமகன் ஆற்றாமை கண்டு, தன் ஆற்றமையும் சொல்லி, ஊடல் தீர்ந்தது

   
91
காமக்கிழத்தி கூற்று


தலைவி

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,
புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
5இன்று நன்று, என்னை அணி

தலைவன்

அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன்,
ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு

தலைவி

மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார்
10செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார்
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி
அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின்,
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
15செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி

தலைவன்

தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து

தலைவி

அன்னதேல், ஆற்றல் காண்:
வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,
20மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும்
கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ
மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்,
பேணாய் நீ பெட்பச் செயல்?

இதுவும் அது

   
92
தலைவன் கூற்று


தலைவன்

புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே:
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,
5உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்;
அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும்,
உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்ப்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகையாதால் மற்று
10நனவினால் போலும், நறுநுதால்! அல்கல்
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவினகத்து

தலைவி

உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக்
15கண்டது எவன் மற்று நீ?

தலைவன்

கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும்
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன்,
20துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை,

தலைவி

ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய், கனா

'முற்றும் கேட்டு வெகுள்' ஏன்ற தலைவனுக்குத் தலைவி 'உரை' என்ன அவன் உரைத்தல்

'கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்!' 'உரை' 'ஆண்டு
இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக
25தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்
துனை வரி வண்டின் இனம்
30மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக்
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,
அவருள்,
ஒருத்தி, செயல் அமை கோதை நகை;
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப;
35ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்;
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்;
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப:
ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று
40வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்
தண் தார் அகலம் புகும்
ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை
முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த
கடி கயம் பாயும், அலந்து
45ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி,
வணங்கு காழ் வங்கம் புகும்
ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
50இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை
ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்'

தலைவி

55நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ? கூறு

தலைவன்

பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
60நல் வாயாக் காண்டை நறுநுதால்! 'பல் மாணும்
கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்
பிரிந்தீர்! புணர் தம்மின்' என்பன போல,
அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
65நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் பெறாது ஆற்றாமை வாயிலாகப் புக்கு,தலைவியை நயப்பித்தல் காரணமாக, 'தெய்வ மகளிர் பொய்தல் அயர்வது ஓர் கனாக் கண்டேன்;அது நன் வாயாப் பருவம் வந்து இறுத்தது பாராய்' என ஊடல் தீர்வது பயனாகத் தலைவிக்குக் கூறியது (27)

   
93
தலைவியின் புலவி


தலைவி

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய,
கண்டது எவன்? மற்று உரை

தலைவன்

5நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின்
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்

தலைவி

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்
10அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்

தலைவன் கூற்றும் தலைவியின் மாற்றமும்

'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,
"இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
15மாயமோ; கைப்படுக்கப்பட்டாய் நீ; கண்டாரை
வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி:
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப,
பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
20செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?
நறுந் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரற் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?
25ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?
கண்ட கடவுளர்தம்முளும், நின்னை
30வெறி கொள் வியல் மார்பு வேறாகச் செய்து,
குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
35நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு'

'காவற் பாங்கின் ஆங்கு ஓர் பக்கமும், என்புழி, 'ஆங்கு ஓர் பக்கமான கடவுளரைக் கண்டு தங்கினேன்' என்ற தலைவற்கு, 'நீ கண்ட கடவுளர் இவர்' எனக் கூறிப் புலந்தது

   
94
குறளும் கூனும் உறழ்ந்து கூறல்


குறளன்

என் நோற்றனைகொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை

கூனி

5அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்,
ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை,
'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?

குறளன்

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி,
10நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப்
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு, என் உயிர்

கூனி

குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,
15'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின்
பெண்டிர் உளர்மன்னோ? கூறு

குறளன்

நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்,
20அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ,
பக்கத்துப் புல்லச் சிறிது

கூனி குறளனை இகழ்ந்து செல்லுதலும், அவள் செலவு நோக்கிக் குறளன் தன் நெஞ்சிற்கு உரைத்தலும்

'போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்
25புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என்
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க
உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின்
இழிந்ததோ, கூனின் பிறப்பு?' 'கழிந்து ஆங்கே,
"யாம் வீழ்தும்" என்று தன் பின் செலவும், உற்றீயாக்
30கூனி குழையும் குழைவு காண்'

'காமனார் நடக்கும் நடைகாண்' என்ற கூனியின்முன், குறளன் நடந்து காட்டுதல்

'யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்'

குறளனின் சூளுரை

35ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம்
உசாவுவம்; கோன் அடி தொட்டேன்

கூனி குறளனை விரும்பி மொழிதல்

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; 'ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும்' எனக்
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்;
40தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப்
போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம்
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டாங்கு

'அடியோர் பாங்கினும் வினை வல பாங்கினும், கடி வரை இல புறத்து என்மனார் புலவர்' என்பதனால், அடியோராகிய கூனும் குறளும் உறழ்ந்து கூறிக் கூடியது

   
95
தலைவி கூற்று


தலைவி

நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப

தலைவன்

5செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது

தலைவி

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
10பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வில் புண்
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
15தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய்விட்டன புண்
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
20துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு

தலைவன்

ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு

தலைவியின் இகழ்ச்சியும் தலைமகன் மாற்றமும்

25'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று
அறிகல்லாய் போறிகாண், நீ
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி'

'அருள்' என்ற தலைவனுக்குத் தலைவி

அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள?
30அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்

'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ, பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைப் பூழ் ஆக்கிக் கூறியது

   
96
தலைவி கூற்று


தலைவி, 'யாங்குச் சென்று வந்தாய்' என, தலைவன் உரைத்த பதில்

'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி:
5ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!
குதிரை வழங்கி வருவல்'

தலைவி

அறிந்தேன், குதிரைதான்;
பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
10நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்
ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை,
15தார் மணி பூண்ட தமனிய மேகலை,
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள்,
20ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை,
வாதுவன்; வாழிய, நீ!
சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண்
குதிரையோ, வீறியது?
25கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே
கோரமே வாழி! குதிரை
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண்
குதிரையோ, கவ்வியது?
30சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே
வியமமே வாழி! குதிரை
மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
35ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த்
திரி; குதிரை ஏறிய செல்

'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ,பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைக் குதிரையாக்கிக் கூறியது

   
97
தலைவி கூற்று


தலைவி

அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ
என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான்
சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த
அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,
5'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல்

தலைவன்

முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்

'புதிய யானை காணத் தங்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி

ஒக்கும்
அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்:
10அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு,
தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து
15முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து,
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடராக வலந்து; படர் செய்யும்
மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார்
20நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை
இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ?
எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித்
தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ
குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா,
25உவா அணி ஊர்ந்தாயும் நீ
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ
சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்
சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல,
30விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை
கடாஅம் படும்; இடத்து ஓம்பு

'கொடியோர் கொடுமை சுடும் என .............. பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரை யானையாகக் கூறிப் புலந்தது.

   
98
தலைவி கூற்று


தலைவி

யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்
மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர,
5பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்மன், யான்

தலைவன்

தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும்
10பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

தலைவி

ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
15மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக,
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம்,
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை,
பாணன் புணையாகப் புக்கு
20ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி,
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே
போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச்
25சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு,
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க,
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை

தலைவன்

30நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன்
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

தலைவி

மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல்
35பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக்
களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ஆற்றாமையே வாயிலாகச் சென்றுழி, அவனைக் கண்டு, 'நீ தாழ்த்த காரணம் என்?' என, 'புதுப் புனல் ஆடித் தாழ்த்தது' என்ன, தலைவி, 'இன்ன புதுப் புனலே ஆடியது' என நெருங்கிக் கூறியது

   
99
சான்றோர் கூற்று

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
5மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்!
அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப்
புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
10பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை!
பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
15ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி
20தொடி கொட்ப நீத்த கொடுமையைக்
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?

அரசன் தலைவனாயவன் தலைவியை நீங்கி இருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்துஆற்றாளாய வழி, அவட்கு நிகழ்ந்த காமத்து மிகு திறத்தை அவ் அரசனை நோக்கிச் சான்றோர் கூறியது. இது பெருந்திணை.

   
100
சான்றோர் கூற்று

ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,
வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக்
காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
5மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!
'ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல்
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோதான்
நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள்
10பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்?
'சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோதான்
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்?
15'உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோதான்
அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்?
ஆங்கு
20தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;
இன் உறல் வியன் மார்ப! 'இனையையால்; கொடிது' என,
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?

இதுவும் அது.