101
தோழி கூற்று


தோழி தலைவிக்கு ஏறு தழுவுதலைச் சுட்டிக்காட்டுதல்

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
5 மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு
10 அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ
15மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
20வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
25 இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு,
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
30ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்

அது கண்டு தலைவி கொண்ட அச்சம் போக்க, தோழி நல் நிமித்தம் கண்டு கூறுதல்

என ஆங்கு
அணி மாலைக் கேள்வற் தரூஉமார், ஆயர்
35 மணி மாலை ஊதும் குழல்
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
ஈன்றன, ஆய மகள் தோள்
பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
40 சுவல்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது;
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம், யாம்
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,
45 கேளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு
வேளாண்மை செய்தன கண்
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்
முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,
50எல்லாம் புணர் குறிக் கொண்டு

'ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர், ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே' என்னும் சூத்திரத்தில், 'திணை நிலைப் பெயராகிய கிழவரும் கிழத்தியரும் உளர்' என்னும் விதியால் கொண்ட அத் தலைவிக்கு அவள் தோழி ஆயர் ஏறு தழுவுகின்றமை காட்டி, அவள் அது கண்டு வருந்தாமல், ஆண்டுப் பெற்ற நல் நிமித்தம் கூறித் தெளிவித்து,அதனை அவ் விதியால் கொண்ட தலைவற்கும் கூறி, மீட்டும் அத்தலைவிக்குத் தம் சுற்றத்தார் கூறியிறுக்கும் கூற்றினையும் கூறி, 'தலைவனும் இன்னும் ஒரு ஞான்று ஏறு தழுவி நம்மை வரைந்து கொள்வன்' என்று ஆற்றுவித்தது (1)

   
102
தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று


தலைவன்

கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற
தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும்,
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்,
அன்னவை பிறவும், பல் மலர் துதைய,
5தழையும் கோதையும் இழையும் என்று இவை
தைஇயினர், மகிழ்ந்து, திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு
என் உயிர் புக்கவள், இன்று?

பாங்கன்

ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
10திரு மா மெய் தீண்டலர்' என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்

சுற்றத்தார்க்குத் தலைவன் செய்தி சொல்லி அனுப்ப, அவர், 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' எனல்

'சொல்லுக!' 'பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார், பாரித்தார்,
மாணிழை ஆறாகச் சாறு

கண்ட சுற்றத்தார் கூற்று

15சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய்! எல்லாம்
மிடை பெறின், நேராத் தகைத்து
தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
20உருத்து எழுந்து ஓடின்று மேல்
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்
25அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான்மன்ற, அவ் ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறு உடை நல்லார்: பகை?
30மடவரே, நல் ஆயர் மக்கள் நெருநை,
அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும்,
உடல் ஏறு கோள் சாற்றுவார்!
ஆங்கு, இனி
தண்ணுமைப் பாணி தளராது எழூஉக
35பண் அமை இன் சீர்க் குரவையுள், தெண் கண்ணி,
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,
அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டி, சிறுகுடி
மன்றம் பரந்தது, உரை!

ஆயன் தலைவனாய் ஏறு தழுவினமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது.

   
103
தோழி கூற்று


பொதுவர் ஏறு தழுவுதல்

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
5பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார், மிடை
10அவர் மிடை கொள
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும்,
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
15கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,
பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ,
20படு மழை ஆடும் வரையகம் போலும்
கொடி நறை சூழ்ந்த தொழூஉ
தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
25எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன

தோழி தலைவிக்குக் காட்டல்

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண்
30செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை
முந் நூலாக் கொள்வானும் போன்ம்
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு,
35தார் போல் தழீஇயவன்?
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்;
கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றுமவன்?
40தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல்
45கூற்று என: உட்கிற்று, என் நெஞ்சு
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்?
50ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல்
55மாயோன் என்று: உட்கிற்று, என் நெஞ்சு

'குரவை ஆடுவோருடன் கூடி, ஆடிப் பாடித் தெய்வம் பரவுவோம்' எனத் தோழி தலைவியை அழைத்தல்

ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்
மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ
60பயில் இதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்
65அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்
வளியர் அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
70எளியவோ, ஆய மகள் தோள்?
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்
கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போல, புகின்
ஆங்கு,
75குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி,
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!

ஆயர் ஏறு தழுவி நின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டி,பின்னர், அவர் ஏறு தழுவிவிட்டுக் குரவை ஆடுகின்றமையும் கூறி, 'ஆண்டு யாமும் சென்று, நின்னை ஏறு தழுவிக் கோடற்கு நிற்கின்ற தலைவன் கேட்டு, ஏறு தழுவிக் கொள்ளுமாறு, நமக்குச் சுற்றத்தார் கூறிக் கிடக்கின்ற முறைமையைப் பாட்டிலே தோன்றப் பாடி, குரவை ஆடி, ''வழுதி வாழ்க!'' என்று தெய்வம் பராவுதும்' நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாக!' எனக் கூறியது (3)

   
104
தோழி கூற்றும் தலைவி கூற்றும்



மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
5தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
10திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
15பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்
20ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின்
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான். வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
25சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
30குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
35பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
40வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன்
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்
45தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று,
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும்
50மீளி மறவனும் போன்ம்
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
55பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர்,
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ
60தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ

தலைவியையும் ஆயத்தையும் தன்னுடன் பாடத் தோழி அழைத்தல்

பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு

தலைவி

65நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்,
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
70அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல்,
'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்?

தோழி

நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
75ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த
ஊராரை உச்சி மிதித்து
ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
80ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே

'நாடக வழக்கினும்' என்னும் சூத்திரத்து, 'பாடலுள் அமையாத' என்றதனால்,ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்கு காட்டிக் கூறி, 'இக் குரவையுள் அவனைப் பாடுகம் வா' என்றாட்கு, அவள் உடம்பாட்டினுள், தான் அலர் அச்சம் நீங்கினமையும், அவவன் தன்னை வருத்தினமையும், கூறிப் பாடிப், பின்னர், தோழி, 'நமர் அவற்கு நின்னைக் கொடை நேர்ந்தார்' எனக் கூறியது (4)

   
105
தோழி கூற்றும் தலைவி கூற்றும்


ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
5ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
10தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
15அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
20மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும்,
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
25ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க,
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து
30மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்,
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
35கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி,
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
40கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா
45வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ

தோழி தன் நெஞ்சோடு தலைவி விரும்பக் கூறியது

50வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்

தலைவியை நோக்கித் தோழி கூறுதல்

நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர,
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
55ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட
கொல் ஏறு போலும் கதம்?
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்:
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
60தம் கண் பொடிவது எவன்?

தலைவி

ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
65அலர் செய்து விட்டது இவ் ஊர்?
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு?

தோழி

70என,
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
75இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே

ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, அவள் ஏறு தழுவிய தலைவனை விருப்பொடு நோக்கியவாற்றைத் தன்னுள்ளே கூறி, முன்னர்க் களவின்கண் தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந்த தன்மையினையும் தலைவிக்குக் கூற, அவளும், 'அவர் அலர் கூறியது நன்று' என்று கூறி,'அன்றே என் நெஞ்சு கலந்து விட்டது; இனி அவர் கொடுப்பதாகக் கூறிய நாளில் செய்வது என்?' என மகிழ்ந்துகூற, அது கேட்ட தோழி, 'யாம் அங்ஙனம் கூடி இனிது இருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடு வாழுமாறு தெய்வத்தைப் பரவுகம் வா' எனக் கூறியது (5)

   
106
காதலருடன் ஆய்ச்சியர் குரவை ஆடுதல்


ஏறு கோடல்

கழுவொடு சுடு படை சுருக்கிய தோற்கண்,
இமிழ் இசை மண்டை உறியொடு, தூக்கி,
ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்,
வழூஉச் சொற் கோவலர், தத்தம் இன நிரை
5பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்
அவ்வழி,
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம் புகும்
10மள்ளர் வனப்பு ஒத்தன
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும்,
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்,
மெய் வார் குருதிய, ஏறு எல்லாம் பெய் காலைக்
கொண்டல் நிரை ஒத்தன
15அவ் ஏற்றை,
பிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி,
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்,
விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு ஒத்தனர்
20அவரை, கழல உழக்கி, எதிர் சென்று சாடி,
அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரி,
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
25அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு
ஏறு தம், கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல், தூங்கும் சினை

குரவை ஆடுதல்

30ஆங்கு,
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர், தழூஉ
முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்;
35முலை வேதின் ஒற்றி, முயங்கிப் பொதிவேம்
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே!
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ? எம் கேளே!
40ஆங்கு, போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர்
காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே!
'கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன்' என்று, ஊரார்
சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்
45செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே
'தென்னன் வாழ்க!' எனக் கானத்தைப் பாடுதல்
ஆங்க,
அருந் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி,
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;
50ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு,
மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே!

தத்தம் இனம் தத்தம் புலத்துப் பிரிப்பான் புக்கவர் ஏறு கொண்டவாறு கண்டு, ஆய்ச்சியர் தம் காதல் மிகுதியால் தம் காதலரைக் கை பிணைந்து குரவை ஆடி, 'தென்னன் வாழ்க!' எனக் கானம் பாடியது

   
107
தோழி கூற்று


தலைவி

எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்
கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ
5தொழுவத்து,
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
10அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது
கேட்டனள், என்பவோ, யாய்?

தோழி

கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!
அவன் கண்ணி அன்றோ, அது?

தலைவி

'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
15கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,
செய்வது இலாகுமோ மற்று?

தோழி

எல்லாத் தவறும் அறும்

தலைவி

ஓஒ! அஃது அறுமாறு?

தோழி தவறு அன்றாமாறு கூறலும் தலைவி பதிலும்

'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின்,
20நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
அன்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'

தோழி

அன்னையோ?
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
25ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து

தலைவி

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்?

தோழி

வருந்தாதி
30மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,
தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்ப, தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது

   
108
அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று


தலைவன்

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
5அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால்,
'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்?

தலைவி

அஃது அவலம் அன்று மன
ஆயர் எமர் ஆனால், ஆய்த்தியேம் யாம், மிக;
10காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை,
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரருள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?

தலைவன்

அதனால் வாய்வாளேன்:
15'முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லும் பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும்,
நல்லேன், யான்' என்று, நலத்தகை நம்பிய
சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்?

தலைவி

சொல்லாதி

'போகாமல் உன்னை விலக்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி

20'நின்னைத் தகைத்தனென்,' 'அல்லல் காண்மன்
மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே,
கண்ட பொழுதே கடவரைப் போல, நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நிற்
கொண்டது எவன் எல்லா! யான்?'

தலைவன்

25கொண்டது:
அளை மாறிப் பெயர்தருவாய்! அறிதியோ? அஞ் ஞான்று,
தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,
இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ?

தலைவி

30நின் நெஞ்சம் களமாக்கொண்டு யாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்?
புனத்துளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ?
இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ?
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?

தலைவன்

அனைத்து ஆக
35வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி,
அண்ணணித்து ஊர் ஆயின், நண்பகல் போழ்து ஆயின்,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு, எவன், விரைந்து சேறி? உதுக்காண்:
40பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின்
தடி கண் புரையும் குறுஞ் சுனை ஆடி,
பனிப் பூந் தளவொடு முல்லை பறித்து,
தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி,
பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு

தலைவி

45இனிச் செல்வேம், யாம்
மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர்
நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை, அவை:
ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக்
காமுற்றுச் செல்வாய்; ஓர் கட்குத்திக் கள்வனை;
50நீ எவன் செய்தி, பிறர்க்கு?
யாம் எவன் செய்தும், நினக்கு?

தலைவன்

கொலை உண்கண், கூர் எயிற்று, கொய் தளிர் மேனி,
இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
55மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்

தலைவி

ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை,
60காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத்
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பற் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக்
காஞ்சிக்கீழ்ச் செய்தேம் குறி

'அடியோர் பாங்கினும் வினை வல பாங்கினும், கடிவரை இல புறத்து என்மனார் புலவர்'என்பதனால், பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்ல அகப்புறத் தலைவனும் தலைவியும் முன் ஒருகால் கூடி, பின்னர் அவன் எதிர்ப்பட்டுழி, அவன்வயின் பரத்தமையால் ஊடி, குறி நேர்ந்தது(8)

   
109
வினை வல பாங்கின் தலைவன் கூற்று

கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
5தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய
10கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல்
புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? ஆயர் மகள்
இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி,
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
15ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ?
படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும்
20பாலொடு கோட்டம் புகின்
இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர்,
'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக' என்று தத்தம்
25கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும்,
வாயில் அடைப்ப, வரும்

வினை வல பாங்கின் தலைவியைக் கண்ட வினை வல பாங்கின் தலைவன் 'காமம் சாலா இளமையோள் வயின்,ஏமம் சாலா இடும்பை எய்தி', கூறியது

   
110
வினைவல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


'எம்மை எளியமாக் கருதினையோ?' என்ற தலைவியை நோக்கித் தலைவன் உரைத்தல்

'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா!
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத்
துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத்
5திளைத்தற்கு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள்
வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து,
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்!
10மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு
விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது,
கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும்,
15நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு
எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி,
கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி
அறியாது அளித்து என் உயிர்'

தலைவி

20அன்னையோ? மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை
இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்;
நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும்
கன்றொடு சேறும், புலத்து

வினை வல பாங்கினால் வெண்ணய் நொடைக்குச் சென்ற தலைவியைக் கண்டு வினை வல பாங்கின் தலைவன் மெய் தீண்டி, தனது ஆற்றாமையை அறிவித்துழி, அவள், 'ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்' என இடம் கூறியது

   
111
தலைவி கூற்று

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
5 புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
10 "பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
15 பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
20 சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

தலைவி ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவு கடாவி, யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது

   
112
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


தலைவி

யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்
பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார், எமர்

தலைவன்

5எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும்
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல்; ஓம்பு' என்றார், எமர்

தலைவி

கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட,
10நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும்
வல்லர், எமர்கண் செயல்

தலைவன்

ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல்,
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை
இகழ்ந்தாரே அன்றோ, எமர்?

தலைவி

15ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு

'என்னை முயங்கு' என்ற தலைவனை நோக்கித் தலைவி உரைத்தல்

'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்!
நின்னை, "என் முன் நின்று,
சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ
புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல
20முயங்கு; நின் முள் எயிறு உண்கும். ' எவன்கொலோ?
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின்,
சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள்
25 சாயினும், ஏஎர் உடைத்து.'

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, வினை வல பாங்கின் தலைவன் விலக்கி,நகையாடி, இருவரும் சில மொழி கூறியவழி, அவள் கூட்டத்திற்கு உடம்பட்டது. இது கைக்கிளை

   
113
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


தலைவன்

நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்

தலைவி

பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
5யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி?

தலைவன்

தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்

தலைவி

ஒக்கும்மன்
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
10நல் இனத்து ஆயர், எமர்

தலைவன் கூற்றும் தலைவி மாற்றமும்

'எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்'
'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு'

தலைவன்

விடேன்.
15உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு,
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்?

தலைவி

'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
20காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்
பொய்ம் மொழி தேறுவது என்?

தலைவன்

தெளிந்தேன், தெரியிழாய்! யான்
பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
25முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று,
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன,
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, அவளை வினை வல பாங்கின் தலைவன் விலக்கி, அவளோடு சிறிது கூறியவழி, அவள் கூடலுறுகின்றாள் கூறியது, இது கைக்கிளை

   
114
தலைவி கூற்று


தலைவி

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா
5ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ
தோழி! அவனுழைச் சென்று

தோழி

சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி

தலைவி

'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
10நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
15வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
20அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

'ஆங்கு அதன் புறத்துப் புரைபட வந்த, மறுத்தலொடு தொகைஇ' என்பது, அவன் வரைவு வேண்டின இடத்து, அவ் வரைவு புறத்ததாகிய வழி, தலைவி தன் உயர்வு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே முன் கூறியவற்றைத் தொகுத்து' என்று பொருள் கூறி, 'அதன் புறம் எனவே, அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவு ஆயிற்று' என்றாம். உயர்வு குடிப் பிறப்பும் கற்பும்; அதற்கு ஏற்ப, 'பிறர் வரைவு மறுத்து, தலைவன் வரையுமாறு நீ கூறு' எனத் தோழிக்குக் கூறியது (14)

   
115
தலைவி கூற்றும் தோழி கூற்றும்

'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
5முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ
10அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள்,
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
15பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா!
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
20வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்,
அல்கலும் சூழ்ந்த வினை.'

தலைவி, 'களவு வெளிப்பட்டது' என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல, 'நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்' எனச் சொல்லி, அச்சம் நீக்கியது

   
116
வினை வல பாங்கின் தலைவனும் தலைவியும்


தலைவி

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ
என்னை ஏமுற்றாய்? விடு

தலைவன்

5விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில்
நீங்கி, சினவுவாய் மற்று

தலைவி

நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு

தலைவன்

10யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்

தலைவி

நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ'
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்
15மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்!
கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்
வருவையால் நாண்இலி! நீ

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு விலக்கிய தலைவனோடு அவள் சில மொழி, கூறி, குறியிடம் கூறியது

   
117
தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்


கையில் உள்ளது யாது?' எனத் தலைவியைத் தலைவன் வினாவுதல்

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
5கையது எவன்? மற்று உரை

தலைவியின் விடையும் தலைவன் வினாவும்

'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள?
காண் தக்காய்! எற் காட்டிக் காண்.'

தலைவி

10காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை

தலைவன்

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!
எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
15மெல்லியது, ஓராது அறிவு

ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது