'காமக்கிழத்தி கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
68
காமக்கிழத்தி கூற்று

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
5புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!
'ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன், வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி,
களையா நின் குறி, வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின்வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ
10'கேள் அலன், நமக்கு அவன்; குறுகன்மின்' என, மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?
'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
15வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்,
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?
20என ஆங்கு
நனவினான் வேறாகும் வேளா முயக்கம்
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்கு,
கனவினான் எய்திய செல்வத்து அனையதே
25ஐய எமக்கு நின் மார்பு

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தி தன் காதல் மிகுதி கூறி, ஊடியவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது

69
காமக்கிழத்தி கூற்று

போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,
5ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்
10துணிந்தது பிறிதாக, 'துணிவிலள் இவள்' என,
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ?
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிறவாக, 'நிறையிலள் இவள்' என,
15வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ?
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய்
தருக்கிய பிறவாக, 'தன் இலள் இவள்' என,
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ?
20என ஆங்கு
தருக்கேம், பெரும! நின் நல்கல்; விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்

இதுவும் அது

71
காமக்கிழத்தி கூற்று

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர,
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
5இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு,
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!
'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து,
10தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல்
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?
'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல்
15அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண்
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய?
'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி,
20அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய?
என்று, நின்
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ!
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு,
25ஆராத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு, ஊடிய காமக்கிழத்தி ஊடியவாறு கண்டு சென்று சார்ந்த தலைவனுடன், அவள் ஊடல் தீர்கின்றாள், கூறியது

72
காமக்கிழத்தி கூற்று

இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ,
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல,
5புது நீர புதல், ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க,
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி,
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!
கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழ,
10பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ
'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?
நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ
15கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,
ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை?
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல்
20குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை?
என ஆங்கு
செறிவுற்றேம், எம்மை நீ செறிய; அறிவுற்று,
அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்ப;
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,
25அழிந்து நிற் பேணிக் கொளலின் இழிந்ததோ
இந் நோய் உழத்தல் எமக்கு?

இதுவும் அது

74
காமக்கிழத்தி கூற்று

பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம்,
5கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர!
'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
10முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து,
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
என ஆங்கு
'கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என,
15ஊரவர் உடன் நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனொடு ஊடிய காமக்கிழத்தியை, அவன் 'இவ்வகையான கூற, நீ ஏமுற்றாயோ?' என்றாற்கு அவன் கூறியது

78
காமக்கிழத்தி கூற்று

பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந் தும்பி,
உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடி
பண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,
5அது கைவிட்டு அகன்று ஒரீஇ, காக்கிற்பான் குடை நீழற்
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு,
நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப்
10பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!
'நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து,
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோதான்
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?
15'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என்
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோதான்
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?
'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல், யான்
20செலின் நந்தி, செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோதான்
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை?
ஆங்க
ஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ,
25வெய்யாரும் வீழ்வாரும் வேறாக; கையின்
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு?

பரத்தையர் சேரியில் சென்று வந்த தலைவனோடு ஊடிய காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாள் கூறியது

90
காமக்கிழத்தி கூற்று


தலைவி

கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,

மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்

பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு?


தலைவன்

ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?


தலைவி

5

கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி,

பாடு பெயல் நின்ற பானாள் இரவில்

தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,

வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா

ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,

10

ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்

சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்

போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?

ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்

தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?

15

மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்

நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?

'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்

சீறடி தோயா இறுத்தது அமையுமோ?

கூறு இனி; காயேமோ, யாம்?


தலைவன்

20

தேறின், பிறவும் தவறு இலேன் யான்;

அல்கல் கனவுகொல் நீ கண்டது?


தலைவி

'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்

கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று

பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!

25

நின்றாய்; நின் புக்கில் பல'


தலைவன்

மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு


தலைவி

ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ

30

நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?


'புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்' என்பதனால், தலைவன் புலப்படப் பரத்தையரிடத்து ஒழுகாது மறைந்து ஒழுகி வந்து நின்றவனுடன் காமக் கிழத்தி ஊடிச் சொல்லி, தலைமகன் ஆற்றாமை கண்டு, தன் ஆற்றமையும் சொல்லி, ஊடல் தீர்ந்தது

91
காமக்கிழத்தி கூற்று


தலைவி

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,
புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
5இன்று நன்று, என்னை அணி

தலைவன்

அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன்,
ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு

தலைவி

மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார்
10செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார்
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி
அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின்,
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
15செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி

தலைவன்

தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து

தலைவி

அன்னதேல், ஆற்றல் காண்:
வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,
20மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும்
கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ
மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்,
பேணாய் நீ பெட்பச் செயல்?

இதுவும் அது