'சான்றோர் கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
99
சான்றோர் கூற்று

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
5மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்!
அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப்
புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
10பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை!
பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
15ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி
20தொடி கொட்ப நீத்த கொடுமையைக்
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?

அரசன் தலைவனாயவன் தலைவியை நீங்கி இருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்துஆற்றாளாய வழி, அவட்கு நிகழ்ந்த காமத்து மிகு திறத்தை அவ் அரசனை நோக்கிச் சான்றோர் கூறியது. இது பெருந்திணை.

100
சான்றோர் கூற்று

ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,
வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக்
காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
5மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!
'ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல்
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோதான்
நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள்
10பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்?
'சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோதான்
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்?
15'உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோதான்
அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்?
ஆங்கு
20தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;
இன் உறல் வியன் மார்ப! 'இனையையால்; கொடிது' என,
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?

இதுவும் அது.