| பொதுவர் ஏறு தழுவுதல்
|
| மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும், |
| புல் இலை வெட்சியும், பிடவும், தளவும், |
| குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும் |
| கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர், |
5 | பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார் |
| முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன |
| பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த |
| சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர், |
| நல்லவர் கொண்டார், மிடை |
10 | அவர் மிடை கொள |
| மணி வரை மருங்கின் அருவி போல |
| அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும், |
| மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் |
| வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும், |
15 | கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் |
| வளையுபு மலிந்த கோடு அணி சேயும், |
| பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து |
| அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும், |
| பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ, |
20 | படு மழை ஆடும் வரையகம் போலும் |
| கொடி நறை சூழ்ந்த தொழூஉ |
| தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் |
| தெரிபு தெரிபு குத்தின, ஏறு |
| ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி, |
25 | எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் |
| உருவ மாலை போல, |
| குருதிக் கோட்டொடு குடர் வலந்தன |
| தோழி தலைவிக்குக் காட்டல்
|
| கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன், |
| ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண் |
30 | செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை |
| முந் நூலாக் கொள்வானும் போன்ம் |
| இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்: |
| கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான் |
| போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு, |
35 | தார் போல் தழீஇயவன்? |
| இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்; |
| கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான் |
| மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி |
| ஊர்வான் போல் தோன்றுமவன்? |
40 | தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை |
| ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன் |
| மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை |
| ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு, |
| சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல் |
45 | கூற்று என: உட்கிற்று, என் நெஞ்சு |
| இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்: |
| புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி |
| வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள் |
| மறுப் போல் பொருந்தியவன்? |
50 | ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற |
| சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும் |
| காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை |
| மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை |
| வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல் |
55 | மாயோன் என்று: உட்கிற்று, என் நெஞ்சு |
| 'குரவை ஆடுவோருடன் கூடி, ஆடிப் பாடித் தெய்வம் பரவுவோம்' எனத் தோழி தலைவியை அழைத்தல்
|
| ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும் |
| மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும் |
| ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே |
| மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ |
60 | பயில் இதழ் மலர் உண்கண் |
| மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் |
| தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ |
| கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் |
| புல்லாளே, ஆய மகள் |
65 | அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, |
| நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து |
| நைவாரா ஆய மகள் தோள் |
| வளியர் அறியா உயிர், காவல் கொண்டு, |
| நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு |
70 | எளியவோ, ஆய மகள் தோள்? |
| விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர் |
| கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின் |
| முலையிடைப் போல, புகின் |
| ஆங்கு, |
75 | குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, |
| தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும் |
| மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம் |
| ஆளும் கிழமையொடு புணர்ந்த |
| எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே! |