| ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்
|
| அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த |
| முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு |
| சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப் |
| பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த |
5 | ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி, |
| 'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார், |
| வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும், |
| தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன், |
| வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத் |
10 | தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும், |
| ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப் |
| பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும், |
| பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல |
| இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும், |
15 | அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் |
| கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும், |
| வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப |
| வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும், |
| கால முன்பின் பிறவும், சால |
20 | மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும், |
| தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய, |
| உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ |
| அவ்வழி, |
| கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க, |
25 | ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க, |
| நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப, |
| சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர் |
| தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த, |
| ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து |
30 | மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும், |
| எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும், |
| தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும், |
| நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி, |
| கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு |
35 | கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி, |
| கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா |
| செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி, |
| உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்! |
| பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக் |
40 | கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா |
| நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின் |
| முகை சூழும் தும்பியும் போன்ம்! |
| இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி, |
| மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா |
45 | வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப் |
| போதரும் பால் மதியும் போன்ம்! |
| ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா |
| இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற |
| பொரு களம் போலும், தொழூஉ |
| தோழி தன் நெஞ்சோடு தலைவி விரும்பக் கூறியது
|
50 | வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில் |
| நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி, |
| பாடு இல, ஆய மகள் கண் |
| தலைவியை நோக்கித் தோழி கூறுதல்
|
| நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர, |
| சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி, |
55 | ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட |
| கொல் ஏறு போலும் கதம்? |
| நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்: |
| கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு |
| எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார் |
60 | தம் கண் பொடிவது எவன்? |
| தலைவி
|
| ஒண்ணுதால்! |
| இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக் |
| கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை |
| மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி, |
65 | அலர் செய்து விட்டது இவ் ஊர்? |
| ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்! |
| இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன் |
| மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப் |
| புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு? |
| தோழி
|
70 | என, |
| பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய |
| ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு, |
| இன் இசை முரசின் பொருப்பன், மன்னி |
| அமை வரல் அருவி ஆர்க்கும் |
75 | இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே |
|