112
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


தலைவி

யார் இவன், என்னை விலக்குவான்? நீர் உளர்
பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார், எமர்

தலைவன்

5எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும்
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல்; ஓம்பு' என்றார், எமர்

தலைவி

கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்கி, நயந்து, அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட,
10நல்லது கற்பித்தார் மன்ற; நுமர் பெரிதும்
வல்லர், எமர்கண் செயல்

தலைவன்

ஓஒ! வழங்காப் பொழுது, நீ கன்று மேய்ப்பாய் போல்,
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை
இகழ்ந்தாரே அன்றோ, எமர்?

தலைவி

15ஒக்கும்; அறிவல் யான் எல்லா! விடு

'என்னை முயங்கு' என்ற தலைவனை நோக்கித் தலைவி உரைத்தல்

'விடேன், யான்; என், நீ குறித்தது? இருங் கூந்தால்!
நின்னை, "என் முன் நின்று,
சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ
புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல
20முயங்கு; நின் முள் எயிறு உண்கும். ' எவன்கொலோ?
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவதுஆயின், தலைப்பட்டாம்; பொய்ஆயின்,
சாயல் இன் மார்பில் கமழ்தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப, தட மென் தோள்
25 சாயினும், ஏஎர் உடைத்து.'

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, வினை வல பாங்கின் தலைவன் விலக்கி,நகையாடி, இருவரும் சில மொழி கூறியவழி, அவள் கூட்டத்திற்கு உடம்பட்டது. இது கைக்கிளை