113
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


தலைவன்

நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்

தலைவி

பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
5யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி?

தலைவன்

தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்

தலைவி

ஒக்கும்மன்
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
10நல் இனத்து ஆயர், எமர்

தலைவன் கூற்றும் தலைவி மாற்றமும்

'எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்'
'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு'

தலைவன்

விடேன்.
15உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு,
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்?

தலைவி

'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
20காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்
பொய்ம் மொழி தேறுவது என்?

தலைவன்

தெளிந்தேன், தெரியிழாய்! யான்
பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
25முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று,
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன,
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, அவளை வினை வல பாங்கின் தலைவன் விலக்கி, அவளோடு சிறிது கூறியவழி, அவள் கூடலுறுகின்றாள் கூறியது, இது கைக்கிளை