120
கண்டார் கூற்று

'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்,
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
5இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக்
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!
10மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண்,
வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி,
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
15ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ?
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண்,
வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?
என ஆங்கு,
20இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை,
துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும்
நல் இறை தோன்ற, கெட்டாங்கு
25இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே

பிரிவிடை ஆற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு, கழிய ஆற்றாளாயின இடத்து, தலைவன் வரவும் அவளது அக மலர்ச்சியும் கண்டார் கூறியது