| பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி, |
| தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர, |
| செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை |
| முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல், |
5 | எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! |
| அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர் |
| மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, |
| உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற் |
| புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே |
10 | நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில் |
| தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, |
| அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த |
| மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே |
| நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால், |
15 | தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்; மதித்தாங்கே, |
| நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது |
| கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே |
| என ஆங்கு, |
| பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின், |
20 | அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி |
| மதி மருள் வாள் முகம் விளங்க, |
| புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே! |