126
தோழி கூற்று

பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி,
தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
5எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!
அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற்
புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே
10நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே
நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால்,
15தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்; மதித்தாங்கே,
நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது
கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே
என ஆங்கு,
பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின்,
20அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்க,
புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே!

தோழி தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது