128
தலைவி கூற்று

'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது,
5அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல,
புதுவது கவினினை' என்றியாயின்,
நனவின் வாரா நயனிலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:
10'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என்
நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி,
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும்
'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,
15நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என,
தலையுற முன் அடிப் பணிவான் போலவும்
கோதை கோலா, இறைஞ்சி நின்ற
ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
20'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,
'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும்
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக்
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
25நனவின் வருதலும் உண்டு' என
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே

வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியது கவின் கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது