| செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, |
| எரி மேய்ந்த கரி வறல்வாய், புகவு காணாவாய், |
| பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், |
| திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, |
5 | மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, |
| உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, |
| ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, |
| சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும் |
| புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம் |
10 | எல்வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் |
| மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை |
| அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல, |
| கல் உறின், அவ் அடி கறுக்குந அல்லவோ? |
| நலம் பெறும் சுடர்நுதால்! எம்மொடு நீ வரின், |
15 | இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் |
| துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை |
| விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ? |
| கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், |
| தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, |
20 | முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த |
| வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ? |
| என ஆங்கு, |
| அனையவை காதலர் கூறலின், ‘வினைவயிற் |
| பிரிகுவர்’ எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇ; |
25 | கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது, |
| கொடுங்குழாய்! துறக்குநர்அல்லர் |
| நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே |