| கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, |
| பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது |
| மா என்று உணர்மின்; மடல் அன்று: மற்று இவை |
| பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த |
5 | புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, |
| பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, |
| அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி: |
| நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய |
| வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம் |
10 | இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு |
| அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்; |
| அன்னேன் ஒருவனேன், யான் |
| என்னானும், 'பாடு' எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே, |
| 'ஆடு' எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ |
15 | என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, |
| நன்னுதல் ஈத்த இம் மா? |
| திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், |
| தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல் |
| ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் |
20 | கண்டும், கண்ணோடாது, இவ் ஊர் |
| தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் |
| பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண் |
| வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் |
| உணர்ந்தும், உணராது, இவ் ஊர் |
25 | வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் |
| அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச் |
| செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம் |
| அறிந்தும், அறியாது, இவ் ஊர் |
| ஆங்க |
30 | என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண் |
| தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன |
| மருளுறு நோயொடு மம்மர் அகல, |
| இருளுறு கூந்தலாள் என்னை |
| அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே |