| நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா, |
| என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண் |
| நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும் |
| கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி, |
5 | அன்ன இடும்பை பல செய்து, தன்னை |
| வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல்: |
| தெருளும் மருளும் மயங்கி வருபவள் |
| கூறுப கேளாமோ, சென்று? |
| 'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்? |
10 | நின் உற்ற அல்லல் உரை' என, என்னை |
| வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன், |
| 'குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான் |
| உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று, |
| மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு |
15 | மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு |
| எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி |
| பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை |
| திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்! |
| எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ? |
20 | காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்; |
| வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி |
| மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த |
| என் அல்லல் தீராய்எனின் |
| என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு |
25 | வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக் |
| கண்ணோடினாய் போறி, நீ |
| நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள் |
| ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும் |
| நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்? |
30 | ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம் |
| கோதை புனைந்த வழி |
| உதுக் காண் சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும் |
| பாவை கொண்டு ஓடியுழி |
| உதுக் காண் தொய்யில் பொறித்த வழி |
35 | உதுக் காண் 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறனில்லான் |
| பைய முயங்கியுழி |
| அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து, |
| விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத் |
| தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும் |
40 | வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று |
| ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை |
| உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ; |
| காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என் |
| கண்ணீர் அழலால் தெளித்து |
45 | பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் |
| பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப் |
| புறங்காலின் போக இறைப்பேன்; முயலின், |
| அறம் புணையாகலும் உண்டு |
| துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று |
50 | பாடுவேன், என் நோய் உரைத்து |
| புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் |
| எல்லி ஆக, 'எல்லை' என்று, ஆங்கே, பகல் முனிவேன்; |
| எல்லிய காலை இரா, முனிவேன்; யான் உற்ற |
| அல்லல் களைவார் இலேன் |
55 | ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து, |
| 'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என் |
| நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய் |
| செய்யும், அறனில்லவன் |
| ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள் |
60 | நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ |
| ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ |
| நீருள் புகினும், சுடும் |
| ஓஒ! கடலே! 'எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்?' என்று, இந் நோய் |
| உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே |
65 | இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை |
| அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு |
| ஆங்கு |
| கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர, |
| கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி, |
70 | அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் |
| திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் |
| நல் அவையுள் படக் கெட்டாங்கு, |
| இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே |