| அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் |
| புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் |
| இணைப் படைத் தானை அரசோடு உறினும் |
| கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின், |
5 | எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை |
| மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, |
| உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர், |
| பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு |
| அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் |
10 | புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப் |
| பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ |
| செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் |
| பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்? |
| பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ |
15 | மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ |
| தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம், |
| பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்? |
| பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ |
| மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ |
20 | புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா, |
| திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்? |
| என ஆங்கு, |
| அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்; |
| வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள் |
25 | முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த |
| இளமையும் தருவதோ, இறந்த பின்னே? |