35
தோழி கூற்று

‘மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;
மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக;
5மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப,
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார;
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,
துறந்து உள்ளார் அவர்’ எனத் துனி கொள்ளல் எல்லா! நீ
‘வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,
10தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ
15"வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால்,
ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ
பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,
20சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
என ஆங்கு,
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி,
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்
காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன்
25வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே

வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி, ‘இக் காலம் அல்லவோ, அவர் வருதும் எனச் சொன்ன காலம்?’ என வன்புறை எதிர் அழிந்தாளை, ‘நீ துனி கொள்ளல்; அவர் வந்தார்’ எனத் தலைவன் வரவு உணர்ந்து, தோழி ஆற்றுவித்தது