36
தோழி கூற்று

‘கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப,
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர,
5இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென,
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற,
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
10சீரார் செவ்வியும், வந்தன்று;
வாரார், தோழி! நம் காதலோரே
பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்;
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள்
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய
15பனி அறல் வாரும், என் கண்
மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு
முலையிடைக் கனலும், என் நெஞ்சு
காதலின் பிரிந்தார்கொல்லோ? வறிது, ஓர்
தூதொடு மறந்தார்கொல்லோ? நோதக,
20காதலர் காதலும் காண்பாம்கொல்லோ?
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர்கொல்லோ? யாவது?'
"நீள் இடைப் படுதலும் ஒல்லும்; யாழ நின்,
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி!
நாள் அணி சிதைத்தலும் உண்டு" என நய வந்து,
25கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே’

காலம் கண்டு ஆற்றாத தலைவியது நிலைமை கண்டு, ஆற்றாத தோழி தான் ஆற்றாளாய்,அவட்குக் கூறியது.