4
தோழி கூற்று

வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின்
சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர்
5 துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின்,
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி
‘காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை
10 போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என்
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்
சூழ்வதை எவன்கொல்? அறியேன்!’ என்னும்
‘முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என்
15 ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர்
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும்
‘நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என்
ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்
20 எண்ணுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும்
என ஆங்கு,
‘கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து’ என, என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
25 ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே

‘பொருள்வயிற் பிரிவேன்’ என்ற தலைமகற்கு, தோழி, தலைவி செலவுக் குறிப்பு அறிந்தவாறும், அவளது ஆற்றாமையும், உணர்த்தி, ‘செலவு ஒழிவாயாக’ எனக் கூறியது