| வள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்
|
| பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் |
| கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, |
| ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் |
| பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று |
5 | இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், |
| கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து, |
| பிடியொடு மேயும் புன்செய் யானை |
| அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் |
| நெடு வரை ஆசினிப் பணவை ஏறி, |
10 | கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், |
| இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி, |
| ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா, |
| தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, |
| நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி, |
15 | குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, |
| பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் |
| பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று |
| தலைவி
|
| இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே; |
| வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற |
20 | சூள் பேணான் பொய்த்தான் மலை |
| தோழி
|
| பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? |
| ‘அஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? |
| குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின், |
| திங்களுள் தீத் தோன்றியற்று |
| தலைவி
|
25 | இள மழை ஆடும்; இள மழை ஆடும்; |
| இள மழை வைகலும் ஆடும் என் முன்கை |
| வளை நெகிழ வாராதோன் குன்று |
| தோழி
|
| வாராது அமைவானோ? வாராது அமைவானோ? |
| வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன் |
30 | ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து |
| நீருள் குவளை வெந்தற்று |
| தலைவி
|
| மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; |
| மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத் |
| துன்னான் துறந்தான் மலை |
| தோழி
|
35 | துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; |
| தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் |
| தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் |
| சுடருள் இருள் தோன்றியற்று |
| தந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்
|
| என ஆங்கு |
40 | நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள் |
| ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி, |
| மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும் |
| மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, |
| மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே |