| வீயகம் புலம்ப, வேட்டம் போகிய |
| மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி, |
| வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு |
| ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின், |
5 | ‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும், |
| பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், |
| வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை |
| நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும் |
| அயம் இழி அருவிய அணி மலை நல் நாட! |
10 | ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன், |
| மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப |
| கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப் |
| பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக |
| அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன், |
15 | வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப |
| நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப் |
| பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக |
| கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன், |
| புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப |
20 | துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன் |
| அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக |
| என ஆங்கு, |
| கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின் |
| புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை |
25 | இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச் |
| சிலம்பு போல், கூறுவ கூறும், |
| இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே |