46
தோழி கூற்று

வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
5‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும்,
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!
10ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப
கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன்,
15வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன்,
புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
20துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை
25இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும்,
இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே

அல்ல குறிப் பட்டுத் தலைவன் மீள, அதனை ‘என் பிழையாகக் கருதுவன்’ எனக்கவன்று ஆற்றாளாகி, ‘தன் குறி தள்ளிய தெருளாக் காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கி, தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிய’ தலைவியது நிலைமை தோழி தலைவற்குக் கூறி, "இவ் இடையீடு நின் தோழியின் ஆயிற்று" என, எனது பிழைப்பு ஆக்கி, அவளை ஆற்றுவிப்பாய்; நீ உரைத்ததே உரையாம் அவட்கு' என அவளது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது(10)