5
தோழி கூற்று

பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம்
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
5 சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின்,
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை,
கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே
10 கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்,
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
15 நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ?
என ஆங்கு
பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது,
அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே

தலைமகன் ‘பொருள்வயிற் பிரிவல்’ என, கேட்ட தோழி, தான் ஆற்றாளாய்,'நீர் செய்யும் பொருளினும் யாம் உமக்குச் சிறந்தேம் என்பது நும் உள்ளத்து உளது எனின், நும்மை நாளும் புள்ளும் விலக்கும்' எனவும், ‘இவள் பிரிந்திருப்பார் இருக்குமாறு இருப்பாள் அல்லள்; பிரிந்த அன்றே இறந்துபடுவள்’ எனவும், சொல்லிச் செலவு அழுங்குவித்தது. (4)