50
தோழி கூற்று

வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல்,
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
5இருள் தூங்கு சோலை, இலங்கு நீர், வெற்ப!
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில்மேல் அசைத்த கையை, ஓராங்கு
நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி,
படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல்
10கடிதல் மறப்பித்தாய்ஆயின், இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே
பல் கோட் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்
15நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை
அதனால்,
கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும்
20கொடுமை இலையாவது அறிந்தும், அடுப்பல்
வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல, பாராட்டி,
உழையின் பிரியின், பிரியும்,
இழை அணி அல்குல் என் தோழியது கவினே

‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ தோழி கூறியது. அது தோழியிற் கூட்டம் நிகழ்ந்தபின், முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந்து ஒழுகுதலாம்