| சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் |
| மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய |
| கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, |
| நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், |
5 | அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! |
| உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, |
| ‘அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! |
| உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும் |
| தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை |
10 | வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, |
| ‘அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, |
| அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், |
| ‘உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும் |
| தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் |
15 | கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் |
| செய்தான், அக் கள்வன் மகன் |