60
தோழி கூற்று


தோழி

சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல்,
நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!
5‘கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனையிழாய்!’ எனக் கூறி தொழூஉம்; தொழுதே,
கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்!
என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண்
10பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள்
உருகுவான் போலும், உடைந்து?

தலைவி

தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ,
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது; எவன்?

தோழி

15‘அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென,
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ!
நின் முகம் காணும் மருந்தினேன்’ என்னுமால்;
20நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!
என் செய்வாம்கொல், இனி நாம்?

தலைவி

பொன் செய்வாம்
ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்
25கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம்,
‘தேறல், எளிது’ என்பாம் நாம்

தோழி

‘ஒருவன் சாம் ஆறு எளிது’ என்பாம், மற்று

தலைவி

சிறிது, ஆங்கே ‘மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க’ என,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி

தோழி

30பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம்
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளோடு உறழ்ந்து, அவனது குறை நயப்பக் கூறியது