61
தோழி கூற்று


தலைவன் வருகை கண்டு, தோழி தலைவியை நோக்கிக் கூறுதல்

எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்:
செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல
5பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின்,
மெல்ல இறைஞ்சும் தலை

தலைவன் எதிர் சென்று, அவனை நோக்கித் தோழி வினாவுதல்

எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என், நீ பெறாதது? ஈது என்?

தலைவன்

10சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்?
செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று

தோழி

இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்; யாது, நீ வேண்டியது?

தலைவன்

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ
15மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்

‘அன்னையோ?’ என, அறியாதாள் போன்று, தலைவனுக்குத் தோழி கூறி, அவன் நீங்கிய பின்னர், தலைவியொடு உசாவுதல்

"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?'

தோழி தலைவியை நோக்கிக் குறை நயப்பித்தல்

ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன்
ஆயின், ஏஎ!
20‘பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்
நல்காள் கண்மாறிவிடின்’ எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக்
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
25கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன் குறை மறாமைக்கு ஏற்பன சொல்லி, தலைமகளைக் குறை நயப்பித்தது