| வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட |
| ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு, |
| ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் |
| ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான், |
5 | வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் |
| தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை |
| பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய |
| பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர! |
| அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ, |
10 | 'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ |
| பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின் |
| வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை? |
| கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு |
| புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ |
15 | தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் |
| ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை? |
| தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு |
| துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ |
| ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் |
20 | களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை? |
| என ஆங்கு, |
| அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது |
| வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும், |
| 'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்; |
25 | பூட்டு விடாஅ நிறுத்து |