66
தலைவி கூற்று

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான்,
5வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை
பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ,
10'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை?
கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ
15தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை?
தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
20களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை?
என ஆங்கு,
அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்,
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்;
25பூட்டு விடாஅ நிறுத்து

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தனது ஆற்றாமையே வாயிலாகத் தலைவி யுழைச் சென்றாற்கு, அவன் முன்பு வதுவை அயர்ந்ததூஉம், அப்பொழுது புனல் ஆடியதூஉம்,இப்பொழுது துணங்கை ஆடியதூஉம், கூறிப் புலந்தாள் தலைவி; அவள் புலந்தவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது (1)