67
தலைவி கூற்று

கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
5போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்
நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா!
புலப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கலப்பென் என்னும், இக் கையறு நெஞ்சே
10கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி,
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா!
ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
15நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா!
துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
20துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு?

இது வாயில் மறுத்த தலைமகள், ஆற்றாமை வாயிலாகப் புக்குக் கூடிய தலைமகனது நீக்கத்துக்கண், புக்க தோழிக்குக் கூறியது