71
காமக்கிழத்தி கூற்று

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர,
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
5இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு,
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!
'ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்து,
10தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்கொல்
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?
'மடுத்து அவன் புகுவழி மறையேன்' என்று யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்கொல்
15அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின்கண்
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக் காணிய?
'தணந்தனை' எனக் கேட்டு, தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி,
20அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய?
என்று, நின்
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ!
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு,
25ஆராத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு, ஊடிய காமக்கிழத்தி ஊடியவாறு கண்டு சென்று சார்ந்த தலைவனுடன், அவள் ஊடல் தீர்கின்றாள், கூறியது