75
தலைவி கூற்று

'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
5ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய்
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
10புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின்,
வதுவை நாளால் வைகலும், அஃது யான்
நோவேன், தோழி! நோவாய், நீ' என
எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென:
'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச்
15சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென,
விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்
'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என
ஊடியிருப்பேனாயின், நீடாது,
20அச்சு ஆறாக உணரிய வருபவன்
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்
'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான்
இகலியிருப்பேனாயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
25புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும்
ஆங்க
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
30அவ்அவ் இடத்தான் அவைஅவை காண
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே

'தலைவன் நாள்தோறும் வதுவை அயர்ந்து வந்தால், யான் அதற்குப் பொறேனாக, நீ ஊடல் இன்றி, அவன் வந்த பொழுதே எதிர்கொள்ளுதி' என்ற தோழிக்குத் தலைமகள் அதற்குக் காரணம் கூறியது