86
தலைவி கூற்று

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,

கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,

பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட

நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய்

5

கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல்

பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப,

கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,

தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த

தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்

10

போர் யானை, வந்தீக, ஈங்கு!

செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை

நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;

கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்

வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

15

'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல்,

மென் தோள் நெகிழ விடல்

பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக்

கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல்,

20

சால்பு ஆய்ந்தார் சாய விடல்

வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு

ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல்,

நோய் கூர நோக்காய் விடல்


பின்னே மறைய நின்ற தலைவனைத் தலைவி கண்டமை

25

ஆங்க

திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்

மகன் அல்லான் பெற்ற மகன்?

மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்


தலைவன் உரையும், அப்பொழுது தலைவன் மார்பில் பாய்ந்த புதல்வன் செயல் கண்டு, தலைவி உரைத்தலும்

'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ? காவாது ஈங்கு

30

ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம்

கன்றி அதனைக் கடியவும், கை நீவி,

குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு,

தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா

அன்பிலி பெற்ற மகன்


'தந்தையார் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தம் இல் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்' என்பதனால், மகனைத் தலைவனை ஒக்கலாம் குணனும் ஒக்கலாகாக் குணனும் தலைவி கூறுகின்றுழி,மறைந்து புக்க தலைவன் அவள் ஊடல் உணர்வன சொல்ல, மகன் வாயிலாக ஊடல் தீர்வாள் தன்னுள்ளே கூறியது (21)