90
காமக்கிழத்தி கூற்று


தலைவி

கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,

மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்

பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு?


தலைவன்

ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?


தலைவி

5

கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி,

பாடு பெயல் நின்ற பானாள் இரவில்

தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,

வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா

ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,

10

ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்

சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்

போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?

ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்

தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?

15

மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்

நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?

'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்

சீறடி தோயா இறுத்தது அமையுமோ?

கூறு இனி; காயேமோ, யாம்?


தலைவன்

20

தேறின், பிறவும் தவறு இலேன் யான்;

அல்கல் கனவுகொல் நீ கண்டது?


தலைவி

'கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்

கண்ட கனவு' என, 'காணாது, மாறு உற்று

பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!

25

நின்றாய்; நின் புக்கில் பல'


தலைவன்

மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு


தலைவி

ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ

30

நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?


'புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்' என்பதனால், தலைவன் புலப்படப் பரத்தையரிடத்து ஒழுகாது மறைந்து ஒழுகி வந்து நின்றவனுடன் காமக் கிழத்தி ஊடிச் சொல்லி, தலைமகன் ஆற்றாமை கண்டு, தன் ஆற்றமையும் சொல்லி, ஊடல் தீர்ந்தது