| தலைவன்
|
| புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக் |
| கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே: |
| முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி, |
| மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது, |
5 | உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; |
| அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும், |
| உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்ப் |
| பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் |
| தருதல் தகையாதால் மற்று |
10 | நனவினால் போலும், நறுநுதால்! அல்கல் |
| கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் |
| வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக் |
| கரை அணி காவினகத்து |
| தலைவி
|
| உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக் |
15 | கண்டது எவன் மற்று நீ? |
| தலைவன்
|
| கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும் |
| மட நடை மா இனம், அந்தி அமையத்து, |
| இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால், |
| இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன், |
20 | துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை, |
| தலைவி
|
| ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து |
| வேட்டதே கண்டாய், கனா |
| 'முற்றும் கேட்டு வெகுள்' ஏன்ற தலைவனுக்குத் தலைவி 'உரை' என்ன அவன் உரைத்தல்
|
| 'கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்!' 'உரை' 'ஆண்டு |
| இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக |
25 | தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் |
| பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே |
| சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத |
| முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில் |
| துனை வரி வண்டின் இனம் |
30 | மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் |
| காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச, |
| அவருள், |
| ஒருத்தி, செயல் அமை கோதை நகை; |
| ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப; |
35 | ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்; |
| ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க, |
| ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்; |
| ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப: |
| ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று |
40 | வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் |
| தண் தார் அகலம் புகும் |
| ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை |
| முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த |
| கடி கயம் பாயும், அலந்து |
45 | ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட |
| மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி, |
| வணங்கு காழ் வங்கம் புகும் |
| ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள், |
| பறந்தவை மூசக் கடிவாள், கடியும் |
50 | இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை |
| ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக் |
| கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல், |
| தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு |
| வண்டலவர்; கண்டேன், யான்' |
| தலைவி
|
55 | நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் |
| முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண் |
| கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான் |
| செய்வது இல் என்பதோ? கூறு |
| தலைவன்
|
| பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் |
60 | நல் வாயாக் காண்டை நறுநுதால்! 'பல் மாணும் |
| கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப் |
| பிரிந்தீர்! புணர் தம்மின்' என்பன போல, |
| அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில் |
| ஆனாது அகவும் பொழுதினான், மேவர, |
65 | நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் |
| தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார், |
| ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு |
| வேனில் விருந்து எதிர்கொண்டு |