91-100

91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
5
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
10
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
15
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

92. குறிஞ்சி
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
5
வாரல் வாழியர், ஐய! நேர் இறை
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
10
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை,
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திருமணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.

இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

93. பாலை
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
5
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
10
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
15
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
20
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்

94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
5
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
10
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்

95. பாலை
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
5
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
10
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
கௌவை மேவலர்ஆகி, ''இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையஅல்ல, என் மகட்கு'' எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
15
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?

போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
5
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
''ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
10
கொண்டனை'' என்ப ''ஓர் குறுமகள்'' அதுவே
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
15
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.

தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ

97. பாலை
''கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்'' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

98. குறிஞ்சி
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
5
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
10
''முருகன் ஆர் அணங்கு'' என்றலின், அது செத்து,
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
''பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு'' எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
15
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
20
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
25
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
''செறிதொடி உற்ற செல்லலும் பிறிது'' எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
30
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார்

99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
5
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
10
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!

உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
5
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
10
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
15
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!

தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்