271-280

271. பாலை
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
5
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
10
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே,
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
15
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?

செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

272. குறிஞ்சி
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
5
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
10
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
''முருகு'' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
15
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

273. பாலை
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
5
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
10
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
15
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.

பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்

274. முல்லை
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
5
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
10
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.

தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்

275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5
''பிதிர்வை நீரை வெண் நீறு ஆக'' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10
ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்

276. மருதம்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
5
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
10
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
15
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்

277. பாலை
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
5
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
10
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
15
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
20
வாரார் தோழி! நம் காதலோரே.

தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்

278. குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
5
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
10
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவு அருந் துயரம் செய்தோன்
15
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர்

279. பாலை
''நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
5
மென் முலை முற்றம் கடவாதோர்'' என,
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
10
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
15
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்

280. நெய்தல்
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
5
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
10
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்