230
கன்றம ராயங் கானத் தல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்
களமலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
5வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாட்
பொய்யா வெழினி பொருதுகளஞ் சேர
ஈன்றோ ணீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக்
கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு
10நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி
நீயிழந் தனையே யறனில் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான்
வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங்
கொருவ னாருயி ருண்ணா யாயின்
15நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே.

திணை - அது; துறை - கையறுநிலை.

அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது.

(இ - ள்.) கன்றைமேவிய ஆனிரை மேய்ந்தகாட்டிடத்தே பிறி தொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும் சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினையுடைய வழிபோவார் தாம்வேண்டியவிடத்தே தங்கவும் களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும் எதிரில்நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காத செவ்விய ஆட்சியினையும் உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச்செய்யும் ஒள்ளிய வாளினையும் தப்பாத மொழியினையுமுடைய எழினி பொருது போர்க்களத்தின் கண்ணே வீழப், பெற்ற தாயால் கைவிடப்பட்ட உண்ணாத குழவியை யொப்பத் தன்னைமேவிய கிளை இடந்தோறும் இடந்தோறும் வருந்த மிக்க பசிவருத்திய கலக்கமுற்ற துன்பமிக்க நெஞ்சமோடு அவனை இழந்து வருத்தமுற்றுக் கிடந்த உலகத்து விதனத்தினும் மிகப் பெரிதாக நீ இழந்தாய், அறமில்லாத கூற்றமே! வாழ்தலேதுவாக வரும் வயலிடத்து விளையும் வருவாயையறியானாய்த் தளர்ந்த குடியையுடைய உழவன் விதையை உண்டாற்போல இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்டிலையாயிற் பகைவருடைய பல உயிரையும் பருகி நிறைவை, அவன் போரிற் பகைவரைக் கொல்லும் களத்தின்கண்-எ - று.

மன் : கழிவின்கண் வந்தது.

உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண். 1 - 2) என்றாற்போல 1ஓரணி குறித்து நின்றது.

எழினி களஞ்சேர ஒருவனாருயிர் உண்ணாயாயின் அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகி ஆர்குவை; அதுகழிந்ததேயெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

‘கடும்பசி கலங்கிய’ என்றும் பாடம்.


(கு - ரை.) 6. எழினி : புறநா. 158: 8 - 9; அகநா. 36, 105, 197, 211.

7. புறநா. 4: 18, குறிப்புரை.

11. புறநா. 210: 8. 13. புறநா. 227: 2.

(230)


1.ஓரணியென்றது, சமாதியென்னும் அலங்காரத்தை.