132
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே
பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே
நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி
5குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.

(பி - ம்.) 1 ‘பின்னுள்ளின் யானே’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனைப் பின்பே நினைத்தேன் யான்; அவ்வாறு நினைந்த குற்றத்தால் எனதுள்ளம் அமிழ்ந்திப்போவதாக; அவனையன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக; அவன் புகழன்றிப் பிறர் புகழைக் கூறக்கேட்ட எனது செவியும் பாழ்பட்ட ஊரின்கட் கிணறுபோலத் தூர்வதாக; நரந்தையையும் நறியபுல்லையும் மேய்ந்த கவரிமாக் குவளைப்பூவையுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து அதன் பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும் வடதிசைக் கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமயமலையும் தென்றிசைக்கண் ஆய்குடியும் இல்லையாயின் இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் கீழ்மேலதாகிக் கெடும்-எ - று,

1. 'முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளினேன்' என உள்ளம் ஆழ்தற்குக்காரணங் கூறினமையால், பிறரைப்புகழ்ந்த நாவெனவும்,பிறர்புகழ் கேட்ட செவியெனவும் ஏனையவற்றிற்கும் காரணம் வருவித்து உரைக்கப்பட்டது,

அன்றி வடதிசை தேவருலகோடு ஒத்தலான், இமயத்தால் தாங்க வேண்டுவதில்லை; தென்றிசைக்கண் ஆய்குடி தாங்கிற்றில்லையாயின்,

இவ்வுலகு பிறழும்; அதனால் இமயத்துக்கு முன்னுள்ளப்படுவோனைப் பின்னுள்ளினேனாதலால், எனது உள்ளம் ஆழ்க; எனது நாப் போழ்க; எனது செவி தூர்வதாக வென்றதாக்கி உரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 5, புறநா, 1161 : 1; “குவளையம் பைஞ்சுனை” (மலைபடு, 251)

4 - 7, 'கவரி, பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும், ஆரியர்துவன்றிய பேரிசை யிமயம்" (பதிற். 11; 21 - 3)

8. ‘திசை’ என்னுஞ்சொல் ஏழாம்வேற்றுமையுருபாக வந்ததற்கு மேற்கோள்; நன், சூ, 301,மயிலை.

(132)