374
கானன் மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வா யிரலை நெற்றி யன்ன
பொலமிலங்கு சென்னிய பாறுமயி ரவியத்
தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
மன்றப் பலவின் மால்வரை பொருந்தியென்
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
இருங்கலை யோர்ப்ப விசைஇக் காண்வரக்
கருங்கோற் குறிஞ்சி யடுக்கம் பாடப்
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்
மான்கண் மகளிர்க் கான்றே ரகன்றுவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர்முகை யடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இருங்கேழ் வயப்புலி வரியதட் குவைஇ
விருந்திறை நல்கு நாட னெங்கோன்
கழறொடி யாஅ யண்டிரன் போல
வண்மையு முடையையோ ஞாயிறு
சொன்விளங் குதியால் விசும்பி னானே.

(பி - ம்.) 3 ‘ரவியபபத’ 4 ‘யிறைக்கும்’ 12 ‘சாநதப்’

திணை - பாடாண்டிணை; துறை - பூவைநிலை.

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.


(கு - ரை.) 1. கானல் - மலைப்பக்கம். அல்கும் - தங்கும்.

2. புல்வாய் - ஒருவகைமான்.

‘இரலை’ என்னும் ஆண்பாற்பெயர் புல்வாய்ச் சாதிக்குரியதென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். மரபு. சூ. 44, பேர்.

3. பொலம் - பொன் ; பொற்றாமரைப்பூ ; ஆகுபெயர். பாறுமயிர் அவிய - சிதறிய மயிர் அடங்கும்படி.

4. உறைக்கும் - துளிக்கும்.

3 - 4. “பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி”, “பனிபழுநிய பல்யாமத்துப், பாறுதலை மயிர்நனைய” (புறநா. 279 : 9, 377 : 1 - 2)

5. மன்றப்பலவு - பொதுவிடத்திலுள்ள பலா ; பொருநர் முதலிய இரவலர் பொதுவிடத்தில் வந்து தங்குதலும் அங்குள்ள மரத்தில் தம் வாச்சியங்களைத் தொங்கக்கட்டுதலும் மரபு ; புறநா. 128 : 1 ; ஐந்திணை யெழுபது, 4.
6. புறநா. 381 : 12 - 3, 397 : 10.

7. ஓர்ப்ப - செவிசாய்த்துக் கேட்கும்படி ; புறநா. 157 ; 12; “பாட லோர்த்து நாடக நயந்தும்” (பட்டினப். 113). இசைஇ - முழக்கி.

8. கருங்கோல் - பெரியதண்டு ; “கருங்கோற் குறிஞ்சி மதனில் வான்பூ” , “பெருங்கோற் குறிஞ்சி” (நற். 268 : 3, 301 ; 1) ; “கருங்கோற் குறிஞ்சிப்பூ” (குறுந். 3 ; 4) ; “கருங்கோற் குறிஞ்சி” (அகநா. 308 : 16). அடுக்கம் - மலைப்பக்கம் ; குறிஞ்சியையுடைய அடுக்கம் ; தலைவனையும் அவனுடைய மலைமுதலியவற்றையும் பாடுதல் மரபு ; புறநா. 130 ; 3, குறிப்புரை ; 143 : 12, குறிப்புரை.

9. புலிப்பல் தாலி - புலியின் பல்லைக் கோத்துச்செய்த கழுத்தணி ; “புலிப்பற் றாலிப் புதல்வர்” (குறுந். 161 : 3) ; “புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி” (அகநா. 7 ; 18) ; “மறங்கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற, மாலை வெண்பற் றாலி” (சிலப். 12 : 27 - 8)

11. முளவுமான் கொழுங்குறை - முள்ளம்பன்றியின் கொழுவிய தசை ; “முளவுமாத் தொலைச்சிய” (புறநா. 325 ; 6) ; “முளவுமா வல்சி” (ஐங்குறு. 364 : 1) ; “முளவுமாத் தொலைச்சுங் குன்றம்” (அகநா. 142 ; 8) “முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடு. 176)

12. விடர்முகை - வெடிப்பையுடைய குகை ; “விடர்முகை முழங்கும்” (ஐங்குறு. 395 : 2) ; “விடர்முகை யடுக்கம் பாய்தலின்”, “விடர்முகை முழங்கும்”, “அஞ்சுவரு விடர்முகை” (அகநா. 47 : 6, 143 : 7, 272 : 4)

13. புகர்முகவேழம் ; புறநா. 373 : 29. மூன்று : குறை, சாந்தம், மருப்பு என்பன.

14. புலித்தோலில் மேற்கூறிய மூன்றையும் குவித்து.

15. இறைநல்கும் - திறையாகக் கொடுக்கும்.

16. ஆயாகிய அண்டிரன் ; கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்” (புறநா. 128 : 5 ; குறுந். 84 : 3) ; “ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல்”, “வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்”, “தண்டா ரண்டிரன்” (புறநா. 129 : 5, 131 : 2, 241 : 1 - 2)

17. ஞாயிறு ; விளி. 18. கொன் - பயனின்மை.

16 - 8. புறநா. 8-ஆம் பாடலின் கருத்து.

(374)