திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.) அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது (பி - ம். அவனை அவர் பாடியது) (இ - ள்.) வெட்டிச்சுட்ட கொல்லைநிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற கரிந்த புறத்தையுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண் உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; அவ்வாறு அணுகாதுபோய் வறிதே ஆகாயத்தையுற ஓங்கினும் ஓங்குக; குளிர்ந்த சுடரையுடைய மதி போலும் வெண்கொற்றக் குடையையுடைய ஒள்ளிய ஞாயிற்றையொப்போனது புகழ்மாயா-எ - று. ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. இனி ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமற் சிறுகினுஞ் சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும். ‘எரிபுனக் குறவன்’ என்று பாடமோதுவாரும் உளர். |