269
1 குயில்வா யன்ன கூர்முகை யதிரல்
பயிலா தல்கிய பல்காழ் மாலை
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர்
5ஒன்றிரு முறையிருந் துண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றிது
கொள்ளா யென்ப கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற்
10பல்லா னினநிரை தழீஇய வில்லோர்க்
கொடுஞ்சிறைக் குரூஉப்பருந் தார்ப்பத்
தடிந்துமாறு பெயர்த்ததிக் கருங்கை வாளே.

(பி - ம்.) 1 ‘யதரல்’ 8 ‘கொள்ளானென்ப’12 ‘பெயர்த்தவிக்’

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு.

ஒளவையார்.


(கு - ரை.) 1. அதிரல் - புனலிக்கொடி;முல்லை. 51; குறிஞ்சிப். 75; மோசி மல்லிகை,காட்டுமல்லிகை; சிலப். 13: 156.

1 - 3. “கொய்குழை யதிரல் வைகுபுலரலரி, சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி” (அகநா.213: 4 - 5)

4. புதிய அகலிடத்திற்கொண்டபுலியினது கண்போன்ற நிறத்தை யுடைய சூடான உணவு;வெப்பர் = வெவ்வர் - வெம்மை; பதிற். 41: 20.

6. புறநா. 262: 2; உவலைக்கண்ணி -தழைவிரவித் தொடுத்தமாலை.

7. பிழி மகிழ் வல்சி - பிழிந்தெடுத்தமதுவாகிய உணவு.

8. என்ப - அசைநிலை. கள்ளின்வாழ்த்தல்: புறநா. 316: 1.

9. கரந்தை - ஒருவகைப் புதற்பூ; இப்பூவாற்றொடுத்த மாலையை நிரைமீட்போர் சூடுவது மரபு.
வாள (12) கொள்ளாயென (8) முடிக்க.

(269)


1 இதுமுதற் பின்வரும் பாடல்களுக்குஉரை அகப்படவில்லை; சில பாடல்கள் இடையிடையே சிதைந்தும்பொருளின் உண்மை காணக் கூடாதவண்ணம் பிறழ்ந்தும்போயிருக்கின்றன.