295
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் மடித்து வேறலைப் பெயரித்
தோடுகைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
5இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே றாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி
வாடுமுலை யூறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

(பி - ம்.) 2 ‘பெயரத தொழுகைத்தெழுதருநடுதூரந்தேறி’, பெயரித்தோறுவைத்தெழுதருந்’ 3 ‘தோறுடைத்து’,தோறுணித்து’ 4 ‘வாய்ப்படை’ 7 ‘மாடு’

திணை - அது; துறை - உவகைக்கலுழ்ச்சி.

ஒளவையார்.


(கு - ரை.) 1. புறநா. 294 : 2,குறிப்புரை.

2. வெந்து - மனம்புழுங்கி. வாய்மடித்து: (புறநா. 296 : 4, 298 : 5). ‘பெயரி - பெயர்த்து;அசைத்து.

3. தோடு - சேனையின் தொகுதியை.உகைத்து - செலுத்தி; கைத்து - செலுத்தி என்றுமாம்.எழுதரூஉ - எழுந்து. ஞாட்பின் - போரில்.

4. முன்வருகின்ற படையைப் பிளந்துஇடமுண்டாக விலக்கி; புறநா. 299 : 3.

5. அழுவம் - பரப்பு. “சிதைந்துவேறாகிய” (புறநா. 278 : 7)

6. சிறப்புடைமை - மறக்குடிக்கேயுரிய விசேடகுணம்; “பிறப்பொக்கு மெல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமையான்” (குறள், 972)

7. வாடுமுலை : புறநா. 276 : 2. ஊறுதல்பாலின்றொழில்.

6 - 7. புறநா. 277 : 3 - 4.

8. பூட்கை - மேற்கோள் : ஓடாப்பூட்கை: “ஓடாப்பூட்கை யுறந்தை” (சிறுபாண். 83)

5 - 8. “செங்களந் துழவுவோள் சிதைந்துவேறாகிய, படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும்பெரிதுவந் தனளே” (புறநா. 278 : 7 - 9)

(295)