95
இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
5கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.

திணை - பாடாண்டிணை; துறை - வாண்மங்கலம்.

அவன் தூதுவிடத் தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக்கொட்டில் காட்ட 1அவர் பாடியது.

(இ - ள்.) இவைதாம், பீலி அணியப்பட்டு மாலையைச் சூட்டப்பட்டு உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு நெய் யிடப்பட்டுக் காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன; அவைதாம், பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது பணிக் களரியாகிய (வேலைசெய்யும் கொட்டிலாகிய) குறிய கொட்டிலிடத்தனவாயின எந்நாளும்; செல்வமுண்டாயின் உணவுகொடுத்து இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூடவுண்ணும் வறியோருடைய சுற்றத்திற்குத் தலைவனாகிய தலைமையையுடைய எம் வேந்தனுடைய கூரிய நுனியையுடைய வேல்-எ - று.

பீலியணிந்தென்பது முதலாகிய வினையெச்சம் நான்கும் வியனகர வென்னும் குறிப்புவினையோடு முடிந்தன; இவற்றைச் செயவெனெச்சமாகத் திரிப்பினும் அமையும்.

'சிதைந்து...........குற்றில' என்பது 2பழித்ததுபோலப் புகழ்ந்து கூறப்பட்டது.

இவை வியனகர; வைந்நுதிவேலாகிய அவை கொற்றுறைக்குற்றி லிடத்தன வெனக் கூட்டுக.
வினைக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்டது.

இது கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு.


(கு - ரை.) 1. இவ் - இவை; என்றது தொண்டைமான் ஆயுதங்களை. வேலுக்குப் பீலி அணிதல் : "தொடையமை பீலிப் பொலிந்த கடிகை, மடையமை திண்சுரை மாக்காழ்வேல்" (அகநா. 119 : 12 - 3)

2. காழ் - காம்பு.

3. புறநா. 272; 4; "கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்" (நெடுநல். 49)

5. கொல்துறை - கொல்லனது துறை. "அழலவாய்க் கிடந்தவை வேல்" (சீவக. 1865) என்பதற்கு, 'கொல்லனுலையை விரும்பின வேல்' என்று பொருள்கூறி 'கொற்றுறைக் குற்றில' என்பதனை மேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர்.

8. "கற்றவர் நற்றுணை பாண ரொக்கல்" (திருச்சிற். 400)

மு. வாகைத்திணைத்துறைகளுள், 'பெரும்பகை தாங்கும் வேல்' என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 17, இளம்; சூ. 21, .
அதிகமானுடைய படைக்கலத்தைப் புகழ்ந்து கூறினமையால் இது வாண்மங்கலமாயிற்று.

(95)


1."இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற், குறுதி பயப்பதாந் தூது" (690) என்னும் குறளின்படி தம்முடைய அரசனது மேம்பாட்டை வேற்று வேந்தனிடத்து ஒளவையார் இச்செய்யுள் வாயிலாக எடுத்துக் கூறியவன்மை மிகவும் பாராட்டற்பாலது.

2.தண்டி. சூ. 64.