(பி - ம்.) ‘பேணியாகுதி’ திணையும் துறையும் அவை. அவன் கோவலூரெறிந்தானை அவர் பாடியது. (இ - ள்.) தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்களுக்கு வேள்விக் கண் ஆவுதியை அருந்துவித்தும் பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தினின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்துதந்தும் கடலுக்குட்பட்ட நிலத்தின்கண்ணே சக்கரத்தை நடாத்திய பழைய நிலைமைபொருந்திய முறைமையையுடைய நின்குடியிற் பழையோரை யொப்பப் பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும், பெரிய பனந்தோடாகிய தாரினையும் பூநிறைந்த காவினையும் நாடோறும் புதிய ஈரம்புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய ஏழிலாஞ் சனையும் நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையைத் தப் பின்றாகப் பெற்றும் அமையாயாய்ப் போரைவிரும்பி ஒலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து மேற்சென்று போரின்கண் வென்று நின்வலியைத்தோற்றுவித்த அற்றைநாளும் பாடுவார்க்குப் பாட அரியை; இற்றைநாளும் பரணன்பாடினன், நீ மாறுபாடு மிக்க கோவலூரை அழித்துவென்று பிறவும் அரண்களை அழிக்கின்ற ஆழியைத் தாங்கிய நினதுதோளை-எ - று. இன்றும் பரணன்பாடினனென்றது, 1அவனும் தன்பெருமையாற் பாடினான்; பிறராற் பாடப்படுதலரிதென்றதாம். நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு அரியை; திகிரியேந்திய தோளை இன்றும் பரணன் பாடினனெனக் கூட்டுக. கழற்காலையும் புடையலையும் காவையும் வேலையுமுடைய நின்முன் னோர் போலத் தாயமெய்தியும் அமையாயென மாறிக்கூட்டுக. நாடுதல் - ஆய்தல். 'மூவரொடு முரணி' என்றும், 'முரணடுதிகிரி' என்றும் பாடம். கொல் : ஐயம். மன் : அசைநிலை. பூவார் கா - வானோர் இவன் முன்னோர்க்கு வரங்கொடுத்தற்கு வந்திருந்ததொரு கா. இவனுக்குப் பனந்தார்கூறியது, சேரமாற்கு உறவாதலின் (பி - ம்உதியவேந்தாதலின்) எழுபொறிநாட்டமென்பதற்கு ஏழரசர்நாடுங்கூடி ஒருநாடாய் அவ் வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று நன்மையும் தீமையும் ஆராய்தலெனினும் அமையும். |