110
கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே
முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்
5யாமும் பாரியு முளமே
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே.

(பி - ம்.) 5 ‘யானும்’

திணையும் துறையும் அவை.

மூவேந்தரும் பறம்புமுற்றியிருந்தாரை அவர் பாடியது.

(இ - ள்.) வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையினையுடைய மூன்று திறத்தீருங் கூடிப் பொருதீராயினும் பறம்பு கொள்ளுதற்கு அரிது; முந்நூறு ஊரையுடைத்து, குளிர்ந்த நல்ல பறம்புநாடு; அம்முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்; நீயிர் பாடினிராய் வரின், நுமக்கு யாமும் பாரியும் உள்ளேம்; அதுவேயன்றி மலையும் உண்டு-எ - று.

நீர் பாடிவரினும் பறம்புநாடு பரிசிலர் முன்னேபெற்றமையின், அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க,


(கு - ரை.) 1. கடத்தல் - வஞ்சியாது எதிர்நிற்றல்; புறநா. 8 : 5.

2. புறநா. 109 : 13, 111 : 2.

6. பாடினிர் : வினையெச்சமுற்று.

(110)