111
அளிதோ தானே பேரிருங் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ வரிதே
நீலத், திணைமலர் புரையு முண்கட்
கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) இரங்கத்தக்கது, பெரிய கரிய குன்றம்; அது வேலான் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது; நீலத்தினது இணைந்த மலரையொக்கும் மையுண்ட கண்ணையுடைய கிணையையுடைய விறலிக்கு எளிது, பாடினளாய் வரின்-எ - று.

அளிதோவென்றது ஈண்டு வியப்பின்கண் வந்தது.

பாடினளாய்வரினென்றகருத்து: அவட்கும் அவ்வாறன்றித் தன் பெண்மையால் மயக்கி வென்றுகோடல் அரிதென்பதாம்.


(கு - ரை.) 1. தான், ஏ இரண்டும் அசைநிலை. புறநா. 109 : 1.

2. புறநா. 109 : 13. 110 : 2.

2 - 3. "எதிரிதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்" (கலித். 96)

4. புறநா. 109 : 16 - 8. கிணை - தடாரிப்பறை.

(111)