119
கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக்
களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச்
செம்புற் றீயலி னின்னளைப் புளித்து
மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ
5நிழலி னீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை யிறந்தும்
இரவலர்க் கீயும் வள்ளியோ னாடே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) கார்காலத்து மழை பெய்து மாறிய காட்சியினியகாலத்துக் களிற்றுமுகத்தின்கட் புகர் (புகர்-புள்ளி) போலத் தெறுழினது மலர் பூப்பச் செம்புற்றின்கண் ஈயலை இனிய மோரொடு கூட்டி அடப்பட்ட புளிங்கறியை யுடைத்து; மெல்லிய தினையாகிய புதுவருவாயையுடைத்து, முன்பு; இனி அது கெடுங்கொல்லோ! நிழலில்லாத நெடிய வழிக்கண் நின்ற தனிமரத்தையொப்ப முரசையுடைய அரசரின் மிகுத்தும் இரவலர்க்கு வழங்கும் வண்மையை யுடையவனது நாடு-எ - று.

பூப்பவென்னும் வினையெச்சம் இன்னளைப் புளித்தென்னும் குறிப் பொடு முடிந்தது.

வள்ளியோன் நாடு இன்னளைப் புளித்து; யாணர்த்து; அது நந்துங் கொல்லோவெனக் கூட்டுக.

தெறுழென்றது காட்டகத்ததொரு கொடி; புளிமாவென்றுரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. "தலைப்பெய றலைஇய" (முருகு. 9)

2. தெறுழ் - கார்காலத்து மலர்வ தொருகொடி. களிற்றுமுகவரி: நற். 176 : 5; கலித். 44 : 5; அகநா. 349 : 11 - 2. தெறுழ்வீ: "அரும்பவிழ்ந், தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன" (கார்நாற்பது, 25); "நறைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ" (நற். 302)

3. "சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர், இதைப்புன வரகி னவைப்புமா ணரிசியொடு, கார்வாய்த் தொழிந்த வீர்வாய்ப் புற்றத், தீயல்பெய் தட்ட வின்புளி வெஞ்சோறு" (அகநா. 394 : 2 - 5). செம்புற்றீயல்: புறநா. 51 : 9 - 10, குறிப்புரை.

4. புறநா. 120 : 16.

5. "அழன்மண்டு போழ்தி னடைந்தவர்கட் கெல்லாம், நிழன் மரம்போ னேரொப்பத் தாங்கி" (நாலடி. 202); 'அருஞ்சுரத்தின் மரம் போல் அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு' (சீவக. 3, ந.); "ஆதபத்துக்கருநிழல் போலருள், வேத வித்தக வீரன்" (வி. பா. அருச்சுனன்றவநிலை. 6)

(119)