121
ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
ஈத லெளிதே மாவண் டோன்றல்
5அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.

திணை - அது; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.

(இ - ள்.) ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின்மாக்கள் பலரும் வருவர்; அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தல் மிகவும் எளிது; பெரிய வண்மையை யுடைய தலைவ! நீ அவ்வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின், அறி வுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக- எ - று.


(கு - ரை.) 2. பரிசின் மாக்கள் : புறநா. 6 : 16, 24; 30.

3. வரிசை : புறநா. 6 : 16; 47 : 6; "வரிசை யறிதலும்" (சிறுபாண். 217); "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அது நோக்கி வாழ்வார் பலர்" (குறள், 528); "தத்தம், வரிசையா னின்புறூஉமேல்" (நான்மணிக். 67)
5. மு. புறநா. 35 : 30.

மு. பாடாண்டிணைக்குரிய விடைகள் பலவற்றுள், சிறிதென்ற விடைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந.

(121)