123
நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
5பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நாட்காலையே மதுவையுண்டு நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின், தேர்வழங்குதல் யாவர்க்கும் எளிது; கெடாத நல்லபுகழ் விளங்கும் மலையன் மதுநுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர், பயன்பொருந்திய முள்ளூர்மலையுச்சியின் கண் உண்டாகிய மழையினது துளியினும் பல-எ - று.

இதன்கருத்து: ஏனையோர்கொடை செயற்கையென்றும், இவன் கொடை இயற்கையென்றும் கூறியவாறு.


(கு - ரை.) 1. "துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல், இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்" (மலைபடு. 463 - 4). நாண்மகிழ் : புறநா. 29 : 5, குறிப்புரை.

2. ஈதல்லே : விகாரத்தால் லகரவொற்று விரிந்தது.

4. இழையணிதேர் : புறநா. 359 : 15; குறுந். 345 : 1; கலித். 99 : 7. தேர்தருதல் ; புறநா. 114 : 6, குறிப்புரை.
5. முள்ளூர் மலையனுடைய தென்பது, "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையனது" (நற். 170), "முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன், முள்ளூர்க் கானம்" (குறுந். 312), "முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி" (அகநா. 209) என்பவற்றாலும் விளங்கும்.

6. புறநா. 34: 20 - 23; குறிப்புரை. 5 - 6. புறநா. 125 : 18 - 9.

(123)