(கு - ரை.) 1. புறநா. 13 : 1. 2. புறநா. 110 : 3 - 4. 4. படுமணி யானை : புறநா. 72, 165, 351; நற். 227. 2-5. புறநா. 200 : 9 - 12, குறிப்புரை. 8. தடவு : இச்சொல் தடமெனவும் வழங்கும்; திருச்சிற். 202, கொளு, பேர். உரையைப் பார்க்க; “தடத் தெரியை” (தக்க. 475) விசுவபுராணசாரமென்னும் தமிழ்நூலின் பதிகத்தில் 15-ஆம் செய்யுளில், “சம்புமா முனிவன் வேள்வித் தழறரு மரபில் வந்தோன்” எனவும், இரட்டையர்களருளிச்செய்த ஏகாம்பரநாதருலாவில், “சம்பு குலத்தொருவன்” எனவும் வந்திருத்தலின், இதில் ‘வடபான் முனிவன்’ என்றது அச்சம்பு முனிவனாக இருத்தல் கூடுமோ வென்று ஊகிக்கப்படுகின்றது. 9. புறநா. 37 : 11, குறிப்புரை. 10-12. துவரை - மைஸுரைச்சார்ந்த துவாரஸமுத்திரமென்னும் நகரம்; இந்நகரில் அரசர் பதினெண்மரும் பதினெண்குடிவேளிரும் இருந்தனரென்றும், அவர்களை அகத்தியமுனிவர் அழைத்துப் போந்து பல இடத்தும் தாபித்தன ரென்றும், அவர்களுள் இருங்கோவேள் சிற்றரசனென்றும் தெரிகின்றது; இதனை, ‘துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்.....கொண்டு போந்து’, மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக்குடிப்பிறந்த வேளிர்’ (தொல். பாயிரம்; அகத்திணை. சூ. 32) என வரும் நச்சினார்க்கினியர் வாக்கியங்களால் உணர்க. 14. புறநா. 203 : 11. 15. மு. புறநா. 202 : 10; தபங்கரென்னுமுனிவர் ஒருகாட்டில் தவஞ்செய்கையில் ஒருபுலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க. அதுகண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடிவந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூற, அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்துகடிந்தமையால் ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸந்திகாதேவியைச் சளனென்னும் அரசன் வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக்கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அது கொண்டு அதனைக் கொன்றமைபற்றி ‘ஹொய்ஸளன்’ என்றும், ‘புலிகடிமால்’ என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர். 17. புறநா. 363 : 1. (201)
|