254
இளையரு முதியரும் வேறுபுலம் படர
எடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல
இடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை யோச்சிக் கிளையுள்
5இன்ன னாயின னிளையோ னென்று
நின்னுரை செல்லு மாயின் மற்று
முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும்
10ஆனாது புகழு மன்னை
யாங்கா குவள்கொ லளிய டானே.

(பி - ம்.) 6 ‘சொல்லு மாயின்’7 ‘முள்ளூர்’

திணையும் துறையும் அவை.

..........கயமனார் பாடியது.

(இ - ள்.) இளையோரும் முதியோரும்வேற்றுநிலத்தே விலங்கிப் போக யான் எடுப்பவும்நீ எழுந்திராயாய் நினது மார்பம் நிலத்தைப் பொருந்தச்சுரத்திடை மேம்பட வீழ்ந்த இளையோய்! வெளுத்தவளை யில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்துச் சுற்றத்தின்கண்இத்தன்மை யனாயினான் இளையனென்று யான் சொல்லநின் இறந்துபாடு கூடிய வார்த்தை செல்லுமாயின், ஊர்முன்னர்ப்பழுத்த கோளியாகிய ஆல மரத்தின்கட் புள்ளுக்கள்மிகும் புதுவருவாயையுடைய அத்தன்மைத்து, என்னுடையமகனது செல்வமும் தலைமையும் எமக்கென்று நாடோறும்அமையாது புகழும் நின்னுடைய மாதா எவ்வாறு ஆவாள் கொல்?அவள் இரங்கத்தக்கவள் தான்! - எ - று.

வளனும் செம்மலும் புள்ளார் யாணர்த்தற்றென்றது,1 புள்ளெல்லாஞ் சென்று அணுக ஆலமரம் பயன்பட்டுநின்றாற்போல இவனும் தன் சுற்றத்தாரும் பிறரும்நட்டாரும் (பி - ம். நாட்டாரும்) நுகரும்படி நின்றமைதோன்ற நின்றது.

‘நின்னுரைசெல்லுமாயின் யாங்காகுவள்கொல்’ என்றகருத்து: யான் இறந்துபட்டவாறு சொல்லின் அன்றேஅவள் வருத்தமுறுவள்; அது யான் மாட்டேனென்பதாம்.

முன்னூர்: முன்மொழிநிலையல். மற்று:அசைநிலை.


(கு - ரை.) 4-5. புறநா. 253 : 5 -6.

8. கோளியாலம்: புறநா. 58 : 2,குறிப்புரை.

7-9. “பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற்செல்வம், நயனுடையான்கட் படின்” (குறள், 216)

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து, தனிமகள்புலம்பிய முதுபாலை’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 24, .

(254)


1 நாலடியார், 202