371
அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது
மரந்தலைச் சேர்ந்து பட்டினி வைகிப்
போதவி ழலரி நாரிற் றொடுத்துத்
தயங்கிரும் பித்தை பொலியச் சூடிப்
5பறையொடு தகைத்த கலப்பையென் முரவுவாய்
ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
மன்ற வேம்பி னொண்பூ வுறைப்பக்
குறைசெயல் வேண்டா நசைய விருக்கையேன்
அரிசி யின்மையி னாரிடை நீந்திக்
10கூர்வா யிரும்படை நீரின் மிளிர்ப்ப
வருகணை வாளி...............யன்பின்று தலைஇ
இரைமுர சார்க்கு முரைசால் பாசறை
வில்லே ருழவினின் னல்லிசை யுள்ளிக்
குறைத்தலைப் படுபிண னெதிரப் போர்பழித்
15தியானை யெருத்தின் வாண்மட லோச்சி
அதரி திரித்த வாளுகு கடாவின்
மதியத் தன்னவென் விசியுறு தடாரி
அகன்க ணதிர வாகுளி தொடாலிற்
பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப்
20புகர்முக முகவைக்கு வந்திசிற் பெரும
களிற்றுக்கோட் டன்ன வாலெயி றழுத்தி
விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
குடர்த்தலை மாலை சூடி யுணத்தின
ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
25வயங்குபன் மீனினும் வாழியர் பலவென
உருகெழு பேய்மக ளயரக்
குருதித்துக ளாடிய களங்கிழ வோயே.

(பி - ம்.) 1. ‘புரவறகாணாத்’, ‘பாவறகாணாது’ 2 ‘மறநதலை சோநது’ 11 ‘இருகணை’ 12 ‘உரை சுரும்பார்க்கும்’, ‘இரைசுரும்பு’ 13 ‘ருழவநின்’ 18 ‘தொழாலிற’ 19 ‘பகலபிணர்’ 20 ‘முகவைவந்திசிற்’ 23 ‘மாலைதுயல்வரச்சூடி’ ‘மாலைசூடி யுணத்தின மானாப்’ 26 ‘பேஎய மகளயா’

திணையும் துறையும் அவை.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார்.


(கு - ரை.) 1. புரவலர் - பாதுகாப்போர்.

2. மரந்தலை - இங்கே மரத்தின் கீழிடம்.

3. அலரிப் பூவை நாராற்றொடுத்து. 4. பித்தை - தலைமயிர்.

3 - 4. "அலரி, சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி" (அகநா. 213 : 4 -5), "தாமரை, சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி" (பொருந. 159 - 60), "தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி" (பெரும்பாண். 481 - 2)

5. தகைத்த - கட்டிய. கலப்பை - சமைத்தற்குரிய கருவிகளையடக்கிய பை ; "காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை" (புறநா. 206 : 10). முரவு - சிதைவு ; "முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி" (பெரும்பாண். 99)

6. ஆடு - சமைத்தல். குழிசி - பானை. பாடின்று - கெடாதபடி.

7. மன்றம் - பொதுவிடம் ; "மன்றவேம்பு" (புறநா. 76 : 4, 79 : 2). உறைப்ப - உதிர.

8. குறை - காரியம்.

9. ஆரிடை நீந்தி - அரிய இடங்களைக் கடந்து.

10. படை - படைவாள் ; பாரை. மிளிர்ப்ப - கீழ்மேலாகப் புரளச் செய்ய. 12. உரைசால் - புகழ்மிக்க.

13. வில்லேருழவின் - வில்லை ஏராகக்கொண்டு உழுதலையுடைய ; உழவன் - வீரன்; "வில்லே ருழவர்" (குறள், 872) ; "மாரி வளம் பெறா வில்லே ருழவர்" (சிலப். 11 : 210)

14. குறைத்தலைப் படுபிணன் - கவந்தம். போர்பு - போர் ; புறநா. 370 : 15. 15. யானையாகிய உழும் எருது.
14 - 6. "படுபிணப் பல்போர் பழிய வாங்கி, எருதுகளி றாக வாண்மட லோச்சி, அதரி திரித்த வாளுகு கடாவின்" (புறநா. 370 : 15 - 7)

17. "மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி", "மாக விசும்பின் வெண்டிங்கண்,.........கடனடுவட் கண்டன்னவென், னியம்" (புறநா. 393 : 20, 400 : 1 - 4)

18. ஆகுளி - சிறுபறை; "நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி" (புறநா. 64 : 1). தொடாலின் - கொட்டுதலுடன் ; "துடிக்கண் புலையன் றொடும்" (பு. வெ. 62)

17 - 8. தடாரியின் கண் அதிர.

19. பணை - ஒருவகைப்பறை. மருள் : உவமவுருபு; புறநா. 368 : 17.

20. புறநா. 368 : 11, 369 : 27, 370 : 21. வந்திசின் - வந்தேன். "முகவைபாடுதல் - பொலிபாடுதல் ; ‘முகவை என்றார், நெல்லு முகந்து கொடுக்கப்படுதலாலே ; புகர்முக முகவை போல" (சிலப். 10 : 137, அரும்பத.)
நீந்தி (9) வந்திசிற் பெரும (20)

22. விழுக்கு - ஊன்விசேடம் ; "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன, நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை", "கொழுநிணங்கிழிப்பக், கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த, மூடைப் பண்ட மிடைநிறைந் தன்ன, வெண்ணிண மூரி" (புறநா. 125 : 1 - 2, 393 : 11 - 4) என்பவற்றையும், "விழுக்கொடு வெண்ணஞ்சு" (சீவக. 1584) என்பதையும், ‘விழுக்கும் வெண்ணஞ்சும் ஊன்விசேடம் : வெண்ணஞ்சு - நிணமுமாம்’ என்னும் அதன் விசேடவுரையையும் பார்க்க.

23. "குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்", "குடர்த்தொடர் மாலை சூழாது" (மணி. 15 : 13, 25 : 72). உணத்தின : "உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்" (புறநா. 166 : 30)

24 - 5. புறநா. 367 : 16 - 8.

26. உரு - அச்சம்.

27. "அஞ்சுவரு கிடக்கைய களங்கிய வோயே" (புறநா. 370 : 27, 373 : 39)

21 - 7. பின்றேர்க்குரவைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். புறத்திணை. சூ. 17, இளம்.; 21, ந. மேற்.

(371)